Total Pageviews

Sunday, 11 December 2011

முல்லைப் பெரியாறு; கேரளத்தின் பிடிவாதமும், தமிழகத்தின் நியாயமும்!



ஒன்றுபடுங்கள்!
புனல் மின்நிலையத்துக்காக கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணைக்கு, போதுமான தண்ணீர் கிடைக்காததால் மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக, முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியது என்பதுதான் இந்தப் பிரச்னையின் அடிப்படையே.
 
முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு ஏற்பட்டபோது, வல்லுநர்கள் குழு இந்த அணை பாதுகாப்புடன் இருப்பதைக் கூறியும்கூட, கேரள அரசு வேண்டுமென்றே அச்சம் தெரிவித்தது. மேலும் பல கோடி ரூபாய் செலவில் அணை பலப்படுத்தப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்குச் சேதம் ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பத்தில் அணையைப் பலப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை.
 
நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்துப் பாதுகாப்புப் பணிகளையும் செய்து முடித்து, முல்லைப் பெரியாறு பேபி டேம் பகுதியில் மிகச் சிறிய பணியையும் செய்து முடிக்க முற்பட்டபோது, அதை முடித்துவிட்டால் நீதிமன்றம் கூறிய அனைத்தையும் தமிழகம் செய்துவிட்டதாக ஆகிவிடுமே என்று அஞ்சி, கேரள வனத்துறை அதிகாரிகளைக் கொண்டு, அந்தப் பணியைத் தடுத்து வருகிறார்கள் கேரள அரசின் தரப்பினர்.
கேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?
 
படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாத நிலையில், பாமரருக்கு எங்கே புரியும் என்கின்ற நினைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம். முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் இணைய தளத்திலும் [http://www.youtube.com/watch?v=l7uJ1nhXZ_A] காணக் கிடைக்கிறது.
 
 
இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளிலும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்.
 
முல்லைப் பெரியாறு பிரச்னையை வேண்டுமென்றே பெரிதாக்கிக் கேரளம் பீதியைக் கிளப்புவதற்கு அடிப்படைக் காரணம், இடுக்கிக்கு அதிக நீர்வரத்து ஏற்படுத்தி மின்சார உற்பத்தியைக் கூட்ட வேண்டும் என்பதால்தான். தமிழகம் தாங்களே இன்னொரு அணையைக் கட்டி விடுகிறோம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக வேறு அணை கூடாது என்கிற கோஷத்தையும் எழுப்பி விட்டார்கள்.
 
29.11.2011 தினமணி தலையங்கத்தில் ஒரு பகுதி.
 
142 அடி தண்ணீர் தேக்குவதை உறுதி செய்யுங்கள்!
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் அதிகாரமிக்க குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு பல்வேறு வழிகளில் வலியுறுத்தி வருகிறது.
 
மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரின் பரிந்துரைப்படி 1980 முதல் 1994 வரை முல்லைப் பெரியாறு அணையை தமிழகம் மிகச் சிறப்பாக பராமரித்து வந்தது. இதனால் அணை புதியதுபோல உள்ளது. அதனால் தான் 2006-ஆம்ஆண்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக அதிகரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் வழிகாட்டுதல்படி அணையின் உறுதித்தன்மை குறித்துப் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இதற்காக தமிழக அரசு ரூ. 1.38 கோடி ஒதுக்கியது.மேலும் உங்கள் கடிதத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 22 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்திய வானியல் மையத்தின் தகவல்களின்படி கடந்த நான்கு மாதங்களில் அந்தப் பகுதியில் நான்கு லேசான நிலநடுக்கங்களே ஏற்பட்டுள்ளன. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. அதுபோல வெள்ளத்தாலும் அணை உடையும் ஆபத்து இல்லை. எந்த விதத்தில் பார்த்தாலும் அணை வலுவாக உள்ளது என்பதே உண்மை.
 
ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது. எனவே, உண்மை நிலைக்கு மாறாக மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க வேண்டியது நமது கடமையாகும்.எனவே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதை உறுதி செய்ய வேண்டும்' என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
 
 
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட
ஒத்துழைப்புத் தரும்படி கேட்டு கேரள முதல்வர் எழுதிய கடிதத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதிய பதில் கடிதத்தின் ஒரு பகுதி.
அ.வீரப்பன்
முன்னாள் தலைமைப் பொறியாளர்,
பொதுப்பணித்துறை
முல்லைப் பெரியாறு அணை 1895 ஆம் ஆண்டு கர்னல் பென்னி குயிக் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட பின்பு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அணை பலவீனமாக இருக்கிறது என்று தொடர்ந்து சொல்லப்பட்ட குற்றச்சாட்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, 1981 முதல் 1994 வரை மூன்று முறை அணை பலப்படுத்தப்பட்டது.
24 அடி அகலம், 3 அடி உயரத்தில் 1200 நீளத்துக்கு 12 ஆயிரம் டன் எடையுள்ள கான்கீரிட் போடப்பட்டு அணை பலப்படுத்தப்பட்டுள்ளது.
அணையின் பின்புறத்தில் தாங்கு அணையாக 135 அடி உயரத்தில் 1700 அடி நீளத்தில் 33 அடி அகலத்தில் 3 லட்சம் டன் கான்கீரிட் கொண்டு பிணைக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்படும் என்ற பயத்தைப் போக்கும் வகையில் அணையின் 1200 அடி நீளத்தில் 9 அடி இடைவெளி விட்டு 4 அங்குல விட்டத்தில் 95 துளைகள் இடப்பட்டு, அதிலிருந்து கம்பிகளை இழுத்து அணையின் கீழ்மட்டத்தில் 30 அடி கீழே உள்ள பாறைகளின் உள்ளே சொருகி, அதைக் கான்கீரிட் கலவையைக் கொண்டு உறுதிப்படுத்தி 20 டன் எடையைத் தாங்கும் அளவுக்கு இறுக்கி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாட்டால் நிலநடுக்கம் ஏற்பட்டாலும், அணைக்குப் பாதிப்பு வராது. எனவே அணை முன்பைவிட 3 மடங்கு வலுவாக உள்ளது. அணை பலவீனமாக உள்ளது என்ற கேரள அரசின் கூற்று அப்பட்டமான பொய்யாகும்.
நிலநடுக்கம் தொடர்பாக இந்திய தர நிர்ணயம்
2002 - இல் வெளியிட்ட தகவல்படி முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணை, சென்னை நகரம் உள்ளிட்டப்பகுதிகள் மண்டலம் - 3இல் உள்ளன. அதாவது 3.5 முதல் 4.2 வரை ரிக்டர் அளவுகோலில் நிலஅதிர்வு - நிலநடுக்கம் பதிவாகும் பகுதிகள் எனக் கூறுகிறது. இந்த நில அதிர்வால் அணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அப்படியே அணை உடைந்தாலும், அந்த நீர் இடுக்கி அணைக்குத்தான் செல்லும்.
இங்கே கவனிக்க வேண்டியது பெரியாறு அணை கடல் மட்டத்திலிருந்து 2861அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. பாம்பனார் 3402அடி, ஒலப்பாறை 3648 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஆனால் கீழே இருக்கும் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மேலே உள்ள பகுதிகளுக்குப் பாயும் என்று நீரியல் விதியையே கேரளம் மாற்றிக் கூறுகிறது.
மேலும் அணையின் பலம் பொறியியல் ரீதியான ஒன்று. பொறியாளர்கள் பார்வையில் அணை உடையவே உடையாது. கேரளத்தைச் சேர்ந்த பொறியாளர்களிடம் விவாதிக்கவும் தயாராகவும் இருக்கிறோம்.
1976 ஆம் ஆண்டில் முல்லைப் பெரியாறு அணையின் கீழே 50 கி.மீ. தூரத்தில் இடுக்கி அணையை 555 அடி உயரத்தில் கேரள அரசு கட்டியுள்ளது. இது முல்லைப் பெரியாறு அணையைவிட மூன்றரை மடங்கு பெரியது. முல்லைப் பெரியாறு அணையின் கொள்ளளவைவிட 7 மடங்கு அதிகம்.
ஆனால் இடுக்கி அணை நீர்ப்பாசன அணை அல்ல. புனல் மின்சாரம் தயாரிப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள அணை. ஆனால் அதற்குத் தண்ணீர் முல்லைப் பெரியாறு அணையிலிருந்துதான் வர வேண்டும். தண்ணீர் வராவிட்டால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. எனவே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட உயரத்தைக் குறைத்தால்தான் இடுக்கி அணைக்குத் தண்ணீர் கிடைக்கும். இதற்காகவே பல பொய்யுரைகளை கேரள அரசு பல காலமாகப் பரப்பி வருகிறது.
23.10.1979 மலையாள மனோரமா இதழில் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது என்று எழுதப்பட்டிருந்தது.
அதற்குப் பின்பு அணையின் நீர்மட்டம் 152 அடி உயரத்திலிருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை இவ்வளவு பலமாக இருந்தாலும், கேரள அரசு அணை பலவீனமாக உள்ளது என்று தொடர்ந்து கூறி வருகிறது. வழக்கும் தொடர்ந்தது.
27.2.2006 இல் உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்காக கேரள அரசு தனது சட்டப் பேரவையில் "கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு (சட்ட திருத்த) மசோதா 2006' என்ற பெயரில் நிறைவேற்றி உள்ளது. இதன்படி கேரள அரசின் அனுமதி இல்லாமல் கேரளத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டத்தை பிற மாநில அரசுகள் அதிகரிக்கக் கூடாது. இது உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை மீறிய செயலாகும்.
மேலும் முல்லைப் பெரியாறு அணையில் உள்ள தமிழகத்தின் பாரம்பரிய உரிமையைப் பறிக்க வேண்டும் என்பதற்காக அது 3 விதமான தடைகளை எழுப்ப முயற்சி செய்கிறது.
1886}இல் திருவாங்கூர் சமஸ்தானத்துடன் பிரிட்டிஷ் அரசாங்கம் செய்து கொண்ட 999 ஆண்டு ஒப்பந்தத்தை செல்லாததாக்குவது.
இரண்டாவதாக, நிலநடுக்கம் உள்ள பகுதி என்று கூறி அணையை உடைக்க முயற்சிப்பது. அல்லது நீர்மட்டத்தைக் குறைக்க நினைப்பது.
மூன்றாவதாக, பெரியாறு பகுதியில் வனவிலங்குகளுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறுவது.
இதில் பிரிட்டிஷார் காலத்திய 999 ஆண்டுக்கான ஒப்பந்தம் அரசியல் சட்டப்படி சுதந்திரம் அடைந்த பின்பும் தொடரும் என்பதே உண்மை.
சுற்றுச் சூழல் அமைச்சகம் செய்த ஆய்வின்படி முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அங்குள்ள மரங்களுக்கும், விலங்கினங்களுக்கும் நன்மையே ஏற்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் மேம்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் உச்சநீதிமன்றத்தால் அதிகாரம் அளிக்கப்பட்ட ஆனந்த் கமிட்டியிடம் கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு 366 மீட்டர் கீழே புதிய அணை ஒன்று கட்டப் போவதாகத் திட்ட அறிக்கை ஒன்றை அளித்தது. அந்த அணையில் இருந்து போதுமான தண்ணீர் இருக்கும்பட்சத்தில் தண்ணீர் பிறமாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று பக்கம் 23 இல் கூறப்பட்டுள்ளது. ஆனால் பக்கம் 37 இல் தமிழகத்துக்கு முல்லைப் பெரியாறு அணையில் எந்தவிதமான பாரம்பரிய உரிமையும் இல்லை என்று கூறியுள்ளது. இதன்மூலம் நமக்குத் தெரிவது என்னவென்றால் தமிழகத்துக்குப் பாரம்பரியமாகக் கிடைத்துவந்த நீரைத் தராமல் தடுத்து நிறுத்துவதற்கான சதித் திட்டத்தை கேரள அரசு தீட்டியுள்ளது என்பதுதான்.
இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. 2 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு நீரின்றிப் போய்விடும். 10 லட்சம் மக்களுக்குக் குடிநீர் கிடைக்காமல் போய்விடும்.
தமிழக மக்கள் கட்சி வேறுபாடின்றி இந்தப் பிரச்னையில் ஒன்றுபட்டு தங்களுடைய எதிர்ப்பை வலிமையாகக் காட்டுவதுதான் கேரள அரசின் சதித் திட்டத்தை முறியடிக்கும் ஒரே வழி.
 
 
வைகோ : பென்னி குயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணை 7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் உடையாத அளவுக்குப் பலம் வாய்ந்தது. கேரளத்துக்கு அரிசி உள்பட அனைத்து உணவுப் பொருள்களையும் வழங்கி வருகிறோம். ஆனால் கேரளம் இதுவரை நியாயமாக நடந்து கொள்ளவில்லை. முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம் என கேரளம் கூறுகிறது. அப்படி உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும். இந்திய ஒருமைப்பாட்டைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு.
 
 
ஆர்.காந்தி , நிலம், நீர் சங்கம் :
கேரள அரசியல்கட்சிகளின் சுயநலத்துக்காக முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை அரசியலாக்கப்படுகிறது. கேரளத்தவர் பரப்பும் பொய்ப் பிரச்சாரத்தை தகர்க்க நாம் தயங்கக் கூடாது. இறுதிவரை தமிழர்கள் ஒன்றிணைந்துப் போராட வேண்டும்.
 
 
பழ.நெடுமாறன் :
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தில்லியில் இரு மாநில அதிகாரிகள் மத்தியில் நடைபெறவிருந்த பேச்சு வார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை எனத் தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.
இருமாநில முதல்வர்களையும் அழைத்துப் பேச வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங் கேரள முதல்வரை வலியுறுத்தி இருப்பதும் சூழ்ச்சிகரமானது. மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டால், அதைக் காரணம் காட்டி உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்க இருப்பதைத் தடுத்துவிடலாம் என்ற திட்டத்துடன் கேரளம் விரித்த வலையில் சிக்க மறுத்த தமிழக அரசைப் பாராட்டுகிறேன். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை எந்தக் காரணத்தைக் கொண்டும் முதல்வர்களுக்கு இடையிலோ, அதிகாரிகள் மட்டத்திலோ, எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இணங்கக் கூடாது.
 
 
செல்வா ,பொறுப்பாளர், தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம். :
முல்லைப் பெரியாறு அணை, கம்பம், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைப் பாதுகாக்கக் கட்டப்பட்டதாகும். அந்த அணை இருக்கும் இடம் தமிழகத்துக்குச் சொந்தமானது என்பதற்கான வரலாற்றுச் சான்று உள்ளது. எனவே அந்த இடத்தை மீட்க அரசாங்கத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளோம்.
அத்துடன் தமிழ்நாட்டின் எல்லைகளை மறுவரையறை செய்து வரலாற்றுப்பூர்வமான நமது தமிழக பகுதிகளை மீட்க வேண்டும்.
 
கே.எஸ். இராதாகிருஷ்ணன் : கேரள மக்கள் பலர் தமிழகத்தில் வணிகம் செய்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து அரிசி, சிமெண்ட், மணல், வைக்கோல், மீன், இறைச்சி, காய்கறிகள் என அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் பெற்றுக்கொள்ளும் கேரளம், கொஞ்சமும் மனிதாபிமானமற்ற முறையில் நதிநீர்ப் பிரச்னைகளில் நடந்துகொள்வதுதான் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
 
 
இதனால் யாருக்கு லாபம்?
 
கேரள எல்லையில் குமுளி அருகே சுமார் 80,000 பேர் போலீஸாரின் தடையுத்தரவை மீறி பேரணி[ 11/12/2011] நடத்தியதும், போலீஸார் தடுத்து நிறுத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பணியில் இருந்த போலீஸாரால் இவர்களைத் தடுக்க முடியவில்லை என்றும்கூட செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் பேரணியை பொதுமக்கள் நடத்தினார்கள்; இதை அரசியல் அமைப்புகள் நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. நேற்றைய தினமும்[ 11 Dec 2011] சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தி, எல்லையைக் கடக்க முயன்றுள்ளனர். இவர்களில் 6,000 பேர் மோட்டார் பைக்குகளில் வந்ததாகச் செய்திகளில் குறிப்பிடப்படுகிறது.
 முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில மக்களின் நலன் கருதி எந்தவொரு பிரிவினை சக்திக்கும் இடம் தராமல் இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பத்திரிகை விளம்பரங்கள் மூலமாக வேண்டுகோள் விடுத்த பின்னர், இத்தகைய பேரணியை அதிமுகவினர் நடத்தியிருக்க வாய்ப்பில்லை. கட்சித் தலைமையை மீறி இத்தகைய பேரணியை நடத்தவும், மறைமுகமாக இயக்கவும்கூட எந்தவொரு அதிமுக மாவட்டச் செயலருக்கும் துணிச்சல் கிடையாது என்பது நிச்சயம். அமைச்சர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.
 
 அவ்வாறாக அரசியல் சார்பு இல்லாமல் இந்த அளவுக்குப் பெருங்கூட்டம் ஒரு பொது நலனுக்காகத் திரள்கிறது என்பது உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும். இருப்பினும், கேரள மக்களையும் அரசையும் மேலும் எரிச்சலூட்டவும், ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதலை முடுக்கிவிடவும்தான் இந்தப் பேரணியும் அத்துமீறல் ஊர்வலமும் பயன்படுமே தவிர, நிச்சயமாக முல்லைப் பெரியாறு பிரச்னையைத் தீர்க்க உதவாது. இதுபோன்ற செயல்கள் இரு மாநில நல்லுறவை மேலும் சிக்கலாக மாற்றும்.
 
 கேரள மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களுக்குத் தமிழகத்தையே சார்ந்துள்ளனர். கறிக்கோழி, முட்டை ஆகியன மட்டுமே ஆண்டுக்கு ரூ.1,780 கோடிக்கு தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதே அளவுக்கு நெல்லும் பிற தானியங்களும் செல்கின்றன. கேரள மாநிலத்துக்கு எந்த வாகனமும் செல்லக்கூடாது என்று மறித்தால் அல்லது அத்தகைய சூழ்நிலையை உருவாக்கினால், அதனால் பெரும் இழப்பைச் சந்திக்கப்போவது தமிழர்களும்தான்.
 கேரள மாநிலத்தவர் தமிழகத்தை நம்பாமல் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்து வாழ்ந்துவிட முடியும் என்றாலும், கர்நாடக மாநிலத்திலிருந்து பொருள்களை வரவழைப்பதில், செலவு அதிகம். இதனால் நெல், காய்கறி, கறிக்கோழி, முட்டை ஆகியவற்றுக்கு கேரள மக்கள் தற்போது கொடுக்கும் விலையைவிட 50 விழுக்காடு அதிகமாகக் கொடுக்கும் நிலைமை உருவாகும். இதைக் கேரள மக்கள் விரும்பவில்லை. விருப்பப்படவும் மாட்டார்கள்.
 
 
 முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், அணை நீரால் பயன்பெறும் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளைக் காட்டிலும் மிக அக்கறையாகவும்; அரிசி, முட்டை, மாமிசம் பெற தமிழகத்தை நம்பியிருக்கும் கேரள மக்களைக் காட்டிலும் அதிக ஆவேசமாகவும், யாரோ சிலர், ஏதோ ஒரு சக்தி, இந்த விவகாரத்தில் கூச்சல்போட்டு, அக்கறையாக மோதலை உருவாக்கப் பார்க்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.இந்தப் பிரச்னை போதாதென்று, நாமக்கல் மாவட்டக் கல்லூரிகளில் பயிலும் கேரளத்து மாணவர்களைத் தமிழர்கள் தாக்கியதாக, ஒரு மலையாளப் பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகி, கேரளத்தில் உள்ள பெற்றோர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. ஆனால், அந்தச் செய்தி பச்சைப் பொய் என்பதே உண்மை.
 இதே மலையாளப் பத்திரிகைதான், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற செய்தியை மிகைப்படுத்தி, கேரளத்தில் இந்த அணைக்கு எதிரான பிரசாரத்தை முதன் முதலாகத் தொடங்கி வைத்தது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
 
 
 முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என்பதும், நிலநடுக்கம் ஏற்பட்டு அணை உடைந்தாலும், 50 கி.மீ. தொலைவில் உள்ள இடுக்கி அணை அனைத்து நீரையும் உள்வாங்கி நிற்கும் என்றும் கேரள அரசின் நீர்வளத் துறைக்கு நன்றாகத் தெரியும். இடுக்கி அணையில் புனல் மின்சாரம் தயாரிக்க இயலவில்லை என்பதால்தான் இந்த அணை மீது கேரள அரசுக்குக் கோபம் என்று நாம் நம்பிக்கொண்டிருந்த வேளையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ள இன்னொரு கருத்து, இப்பிரச்னையின் வேறொரு பரிமாணத்தைக் காட்டுகிறது.
 
 ""முல்லைப் பெரியாறு அணையின் நீர்உயரம் 136 அடியாக இருக்கும்போது நீர்ப்பரப்பு 4,678 ஏக்கர். அணையில் 155 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கும்போது நீர்ப்பரப்பு 8,591 ஏக்கர். அதாவது 3,913 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த பல ஆண்டுகளாக நீரில் மூழ்காமல் இருக்கிறது. இந்தப் பகுதிகளில் கேரளத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து தங்கும் விடுதிகள் மற்றும் கட்டடங்கள் கட்டியுள்ளனர். 136 அடிக்கு மேலாக தண்ணீரைத் தேக்கினால் இந்த ஆக்கிரமிப்புப் பகுதியில் கட்டப்பட்ட விடுதிகள் தண்ணீரில் மூழ்கும். முல்லைப் பெரியாறு அணையைச் செயலிழக்கச் செய்ய இதுவும் ஒரு காரணமாக சிலர் தெரிவிக்கின்றனர்'' என்று முதல்வர் கூறியுள்ளார்.
 
 
 சுமார் 4,000 ஏக்கர் பரப்பில் ரிசார்ட் போன்ற விடுதிகள் கட்டியுள்ளவர்கள் யார்? இவர்களின் பின்புலம் என்ன? என்பதைப் பற்றி விசாரித்தால், முல்லைப் பெரியாறு அணையால் யாருக்கு இழப்பு, அதனால் யாருக்கு ஆத்திரம் என்பது வெளிப்படும்.


 நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புவது, மாநிலங்களுக்கிடையே உள்ள உறவு சீர்கெடுவது இந்திய ஒற்றுமைக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்பதைத்தான். இந்தப் பிரச்னையில் ஏன் தமிழக, கேரள அரசுகளை விடவும் அதிக அக்கறையும் கவலையும் கொள்ள வேண்டியது மத்திய அரசுதான். இது வெறும் நதிநீர்ப் பிரச்னை அல்ல; இந்திய ஒற்றுமை சம்பந்தப்பட்ட பிரச்னை, நினைவிருக்கட்டும்!
 
 தமிழர்களின்  வளம் திட்டமிட்டு பறிக்கப்படும் வல்லாதிக்க சதிக்கு எதிராக ஒன்று திரள வேண்டியது காலத்தின் கட்டாயம். இப்போதும் கூட காலம் தாழ்ந்துவிடவில்லை. தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுவோம். " ஒன்றுபடுங்கள் வென்றுவிடுங்கள்."

Saturday, 3 December 2011

கல்விமுறை சரியில்லை!?

தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகள் பெறுவதைப் போல, தேர்விலும் பணம் கொடுத்து தேர்ச்சி பெறுவது இன்றைய உயர்கல்வி உலகில் மிக இயல்பான செயலாக மாறிவிட்டது.
 
அண்மையில் பொறியியல் கல்லூரியில் பல பாடங்களில் தேர்ச்சி பெறாமல் இருக்கும் தனது தம்பிக்கு மதிப்பெண் போட்டுக்கொடுத்து தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக, பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு பெண்மணி ஓர் உதவிப் பேராசிரியருக்கு கையூட்டாக ரூ.3 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், ஆனால் அந்த கல்லூரி ஆசிரியர்ஏமாற்றிவிட்டார் என்றும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தச் செய்தி ஏற்படுத்திய பரபரப்பின் காரணமாக, பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் இது குறித்து பேச வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். தங்கள் பல்கலைக்கழகத்தில் இத்தகைய முறைகேடுகள் இல்லை என்றும் விடை திருத்தும் பணி முறைகேடுக்கு இடமளிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமேடைகளில் இதுபற்றிப் பேசுவதும், மாணவர்கள் இத்தகைய முறைகேடான வழிகளைப் பின்பற்றக்கூடாது என்று அறிவுரை வழங்குவதும் கடந்த சில வாரங்களாக அடிக்கடி பத்திரிகைகளில் தென்படும் செய்தியாக இருக்கிறது.
 
 
துணைவேந்தர்கள் இவ்வாறாகக் கூறினாலும், கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் சங்கத்தினர் சொல்லும் கருத்து நேர்மாறாக இருக்கிறது. இவ்வாறு பணம் கொடுத்து தேர்ச்சி மதிப்பெண் பெறுவது பல இடங்களில் அதிக அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள். கால் நூற்றாண்டுக்கு முன்பே இத்தகைய "பேப்பர் சேஸிங்' (விடைத்தாளைத் துரத்துதல்) பற்றிய பேச்சு இருக்கவே செய்தது. சில மாணவர்கள் தங்கள் விடைத்தாள்கள் எந்தப் பேராசிரியருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதை பல்கலைக்கழகத்தில் லஞ்சம் கொடுத்துத் தகவல் பெறுவதும், அதன் பின்னர் தங்களுக்கான டம்மி எண்களைப் பெற லஞ்சம் கொடுப்பதும், விடைத்தாள் திருத்தும் பேராசிரியர் வீட்டுக்கே போய், வாசலில் அழுது, கெஞ்சி அல்லது சேவகம் செய்து, எதற்கும் மனம் இரங்கவில்லை என்றால் பணத்தாசை காட்டி அந்தப் பேராசிரியரின் கருணையை எப்படியாவது பெற்று, பாஸ் மார்க் வாங்கி வருவது ஒரு கலையாகவே இருந்தது. அந்த அனுபவத்தை கொஞ்சம் இட்டுக்கட்டி கண் காது வைத்து சுவாரஸ்யமாகச் சொல்லும் தலைமுறையும் இருக்கவே செய்தது.
 
இப்போது அத்தகைய அனுபவங்களுக்கு அவசியமே இல்லை. ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் இதற்காக இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் உதவிப் பேராசிரியர்களாகவும் பேராசிரியர்களாகவும்கூட இருக்கிறார்கள். இன்றைய உயர் கல்வி உலகில் இத்தகைய முறைகேடுகள் பொறியியல் படிப்பில் மேலதிகமாக நடைபெறுகிறது என்பதுதான் உண்மை.
 
பல்கலைக்கழகங்களிலும், குறிப்பாக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் தனியார் பல்கலைக்கழகங்களிலும் இத்தகைய முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவோ, கண்காணிக்கவோ முறையான அமைப்புகள் இல்லை. அத்தகைய அமைப்புகள் இருந்தாலும் அவை வீணான ஒன்றாக ஒப்புக்கு இருக்கிறதே தவிர, அதனால் பயன் இருப்பதாகத் தெரியவில்லை.
 அரசு நடத்தும் கலந்தாய்வு மூலமும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழும் ஓர் ஆண்டுக்கு சுமார் ஒன்றரை லட்சம் பேர் பொறியியல் படிப்பில் சேருகிறார்கள். இவர்கள் அனைவரும் பொறியியல் படிப்பிற்கு மிக அத்தியாவசியமான உயர் கணிதத்தில் புலிகள் அல்ல. மேனிலைப் பள்ளியில் படிக்கும் முறை, பாடத்திட்டம் அனைத்துமே பொறியியல் கல்லூரிகளில் மாறிவிடுகிறது.
 
 
 உண்மையாகவே உயர் கணிதத்தில் புரிதல் இருக்கும் மாணவர்களால் மட்டுமே பொறியியல் கல்லூரியில் தொடர்ந்து நல்ல மதிப்பெண் பெற முடியும். பெற்றோர்களின் வறட்டு கௌரவத்துக்காகவும், ஏதோ பொறியியல் படிக்காவிட்டால் வருங்காலமே சூன்யமாகிவிடும் என்பது போன்ற தவறான கண்ணோட்டத்தினாலும் கணிதத்தில் பலவீனமாக இருந்தாலும் நன்கொடை கொடுத்தாவது பொறியியல் கல்லூரிகளில் சேர்பவர்கள் பலர். ஆகவேதான், பொறியியல் மாணவர்கள் பலருக்கும் அரியர்ஸ் அதிகமாக இருக்கிறது.
 
 
 பல லட்சம் செலவு செய்து படிக்க வைக்கும் பெற்றோரின் கோபத்துக்கு ஆளாகவும்கூடாது. அதே நேரத்தில் தேர்ச்சி பெற்றுவிடவும் வேண்டும் என்கின்ற கட்டாயம் அந்த மாணவர்களை எப்படியாகிலும், எந்தப் பொய்யைச் சொல்லியாவது பெற்றோரிடம் பணம் பெற்று அதைக்கொண்டு முறைகேடாகத் தேர்ச்சி பெறுவதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழியாக இருக்கிறது.
 
 
 அப்படியே மாணவர்கள் யோக்கியர்களாக இருந்தாலும் அவர்களது பெற்றோரும் அண்ணன் அக்கா போன்ற ரத்தஉறவுகளுமே இந்த முறைகேட்டில் இறங்கிவிடுகிறார்கள். படிப்புக்காக பல லட்சம் ரூபாய் செலவழித்துவிட்டதால் இன்னும் கொஞ்சம் செலவழித்து ஒரு பட்டம் வாங்கிவிட்டால் போதும், பிறகு இதேபோல பணத்தைக் கொடுத்து ஒரு வேலையும் வாங்கிவிடலாம் என்கின்ற "நம்பிக்கைவாதி'களாக இருக்கிறார்கள். இந்த இரண்டுக்கும் வழியில்லாமல், இதைத் தாங்கிக்கொள்ளும் சக்தியில்லாத மாணவர்களில் சிலர் தற்கொலை செய்துகொள்வதையும் பார்க்கிறோம்.
 
 
மாணவர்கள் எந்தப் பாடத்திட்டத்தைத் தேர்வு செய்வது என்பதை அவர்களிடம் விட்டுவிடும் நிலைமை உருவானால், இத்தகைய முறைகேடுகளில் 90 விழுக்காடு தானே மறைந்துபோகும். ஒரு மாணவர் தனக்குப் பிடித்தமான பாடத்திட்டத்தை எடுத்துப் படிக்கும்போது இத்தகைய பேப்பர் சேஸிங் என்கின்ற வேலைக்கே இடமில்லை. கல்லூரிக்கு மட்டம் போட்டு ஊர்சுற்றுவதும்கூட பிடிக்காத படிப்பினால்தான்.
 
 
கல்லூரி மாணவர்களைப் பொறுத்தவரை வெறும் 'அரியர்ஸ் கிளியர்' ஆகிவிட்டாலே போதும். ஆனால், பள்ளி மாணவர்கள் பெற்றோருக்காக மதிப்பெண் வாங்கிடப் படும்பாடு மிக மிக அதிகம். மாணவர்கள் விரும்பும் கல்வி என்பதை நாம் உருவாக்கவில்லை. நாம் உருவாக்கிய கல்வியை மாணவர்கள் படித்தாக வேண்டும் என்ற நிலைதான் இருக்கிறது.
 
கல்வித்துறைத் திணிப்பு ஒருபுறம், பெற்றோரின் திணிப்பு மறுபுறம். இந்த நிலை மாறினால் மட்டுமே, கல்வித்துறையில் ஊழல்கள் களையப்படுவது மட்டுமன்றி கல்வி தரமானதாகவும்,பயனுடையதாகவும் மாறப்போகிறது. சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க வேண்டிய நேரமிது.
 

இது டாடா நிறுவனம் காட்டுகிற வழி, கற்றுக் கொள்ள வேண்டிய ஜனநாயகப் பாடங்கள் அதிகம்.

தேர்தல் காலத்தில் கூட்டணி அமைப்பது போன்ற முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு அரசியல்வாதிகள் பொதுக்குழு, செயற்குழு என்று சம்பிரதாயத்திற்காகக் கூடி ‘தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறோம்’ என்று அடிமைச்சாசனம் எழுதிக் கொடுக்கிறார்கள். அவர்கள் டாடா நிறுவனத்திடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஜனநாயகப் பாடங்கள் அதிகம்.

தனக்கு அடுத்த தலைவர் இன்னார் என்று ரத்தன் டாடா சொல்லியிருந்தால், அவரை யாரும் கேள்வி கேட்பதற்கில்லை. இருந்தும், தலைமைப் பொறுப்புக்கு உரிய நபரைத் தேர்வு செய்வது பற்றிய விதிகளை உருவாக்கி, அவற்றைப் பின்பற்றி தனக்கு அடுத்த நபரை ஒரு குழுவின் மூலம் தேர்ந்தெடுத்து, அவரை ஒரு வருட காலம் தன்னுடன் சேர்ந்து பணியாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார். தொழில்துறை ஜனநாயகம் இது. கட்சிகளில் இந்த ஜனநாயகம் இல்லை.


ரசியல் ஒரு வியாபாரம் என்று விமர்சிப்பவர்களுக்கு, அரசியலைப் பற்றித் தெரிந்த அளவுக்கு வியாபாரத்தைப் பற்றித் தெரியவில்லை. நேர்மைக் குறைவினால் வியாபாரம் நொடிந்து விடுகிறது. நேர்மைக் குறைவினால் அரசியல் வளர்கிறது. ஒருமுறை ஏமாந்த வியாபாரியிடம் வாடிக்கையாளன் மறுமுறை ஏமாறுவதில்லை. ஆனால், வாக்காளர்கள் மாறி மாறி அரசியல் கட்சிகளிடம் ஏமாந்து போகிறார்கள்.

வியாபாரியின் முதலீடு – அவரது சொந்தப் பணம் அல்லது கடன். அரசியல்வாதியின் முதலீடு – அடுத்தவருடைய பணம். வியாபாரி, ஓடி ஆடிச் சம்பாதிக்கிறார். அரசியல்வாதி, இருந்த இடத்திலிருந்தே கறக்கிறார். செல்வாக்கான அரசியல்வாதி கட்சியில், ஆட்சியில் வெகு எளிதாகத் தன் வாரிசைப் புகுத்தி விடுகிறார். குடும்ப வியாபாரத்தில் பலர் அப்படிச் செய்வதில்லை. தம் வாரிசுகளைத் தொழிலதிபர்கள் நேரடியாக நிர்வாகத் தலைமைப் பொறுப்புகளில் நியமித்தால் அது தவறல்ல. அது அவர்கள் பணம்; அவர்கள் நிறுவனம்.

வாக்காளர்களைப் பற்றிக் கவலைப்படாத அரசியல்வாதிகளைப் போல் தொழிலதிபர்கள் நடந்து கொள்வதில்லை. நேருவுக்குப் பிறகு இந்திரா, இந்திராவுக்குப் பிறகு ராஜீவ், அவருக்குப் பிறகு முகமூடி சோனியா... என்று, தொழிலதிபர்கள் செயல்படுவதில்லை. பங்குதாரர்கள், பாகஸ்தர்கள், நிதி நிறுவனங்கள் இவற்றைப் பற்றி தொழில் நிறுவனங்கள் கவலைப்படுகின்றன. தலைமை நிர்வாகி தேர்வு சரியானபடி இருக்க வேண்டும். அதில் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை என்பதை பல தொழிலதிபர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அண்மையில் இதைச் செய்துள்ளவர் ரத்தன் டாடா.


ரத்தன் டாடா



ஜே.ஆர்.டி. டாடா

இந்திரா காந்தியும், மொரார்ஜி தேசாயும், ஜே.ஆர்.டி. டாடாவைப் படாதபாடு படுத்தினார்கள். இருந்தாலும் அவமானங்களையும், நஷ்டத்தையும் ஏற்றே தொழில் செய்தார் ஜே.ஆர்.டி. டாடா. தகுதிக்கு முதலிடம் கொடுத்துத் தொழில்முறை நிர்வாகிகளைத் தலைமைப் பொறுப்பில் நியமித்தார். ஒரு கட்டத்தில், அந்த நிர்வாகிகள் சிற்றரசர்களாகவே இருந்தார்கள். இது ஒருவித சர்வாதிகாரம் என்று தெரிந்தாலும், அவரவர் போக்கில் நிறுவனங்கள் வளரட்டும் என்று இருந்துவிட்டார்.

அவரை அடுத்து, ரத்தன் டாடா தலைமை ஏற்றபோது, நரசிம்மா ராவின் புதிய பொருளாதாரக் கொள்கை பிறந்தது. தொழில் துறைக்கு ஓரளவுக்கு நிர்வாக சுதந்திரம் கிடைத்தது. ஆனால், ஜே.ஆர்.டி.யின் காலத்தில் டாடா நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்த முதியவர்களைக் கழற்றி விட ரத்தன் டாடா சிரமப்பட்டார். டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவராக இருந்த ருஸ்ஸி மோடி எளிதில் பதவி விலகவில்லை. இந்த நிலையில், நிறுவனத்தில் பல நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து, புதிய தொழில்களில் இறங்கி சரிப்படாதவற்றை விற்று விட்டு, 1991 முதல் நிறுவனங்களை முன்னுக்குக் கொண்டு வந்த பெருமை ரத்தன் டாடாவுக்கு உண்டு.

ஜே.ஆர்.டி. டாடாவுக்கு இந்திரா காந்தியும், மொரார்ஜி தேசாயும்; ரத்தன் டாடாவுக்கு தயாநிதி மாறனும், மம்தா பானர்ஜியும். எல்லாவற்றையும் சமாளித்து வந்துள்ள ரத்தன் டாடா, அடுத்த வருடம் ஓய்வு பெறுகிறார். சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் ஐந்து நிபுணர்கள் கொண்ட தேர்வுக் குழுவை அமைத்து அவர்களிடம் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ உள்ள தகுதியான நபரைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமையைக் கொடுத்தார்.

அந்தக் குழு பலமுறை கூடிப் பலரை நேர்காணல் செய்தது. இறுதியில் ஒருமனதாக, சைரஸ் பி. மிஸ்திரி என்பவரைத் தேர்வு செய்தது. இவர் வெளி நபரல்ல. டாடா சன்ஸ் இயக்குனர் என்ற முறையில் இவரும் தேர்வுக் குழுவில் முதலில் இருந்தார். தன் பெயர் பரிசீலனையில் இருப்பதை அறிந்து, குழுவிலிருந்து விலகினார். பெப்சியின் இந்திரா நூயி உட்பட, சர்வதேசப் புகழ் பெற்ற பிரபல நிர்வாகிகளின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தும், வெளியே அதிகம் தெரிய வராத, டாடா தொழில் குடும்பத்தின் கட்டுமான நிறுவன நிர்வாக இயக்குனராக உள்ள 42 வயது சைரஸ் மிஸ்திரி, புதிய பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இவர் ஒரு வருட காலம் ரத்தன் டாடாவிடம் பயிற்சி பெறுவார்.

ஆதார் அட்டை – சர்வரோக நிவாரணியா?

‘ஆதார்’ என்கிற தேசிய அடையாள அட்டை வினியோகம் துவங்கி இருக்கிறது. எல்லா பிரச்சனைகளுக்கும் ஒற்றைத் தீர்வாக, சர்வரோக நிவாரணியாக இந்த அடையாள அட்டை இருக்கப் போகிறது என்ற அறிவிப்பால், ஆதார் அடையாள அட்டையைப் பெற பொதுமக்கள் அலைமோதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மிகப் பெரிய செலவில் - 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் – செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் பெருகி வருகின்றன.

‘வளர்ந்த நாடுகளைப் போல இந்தியாவிலும், குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தனி அடையாள எண்களுடனும் கூடிய அடையாள அட்டைகளை வழங்க வேண்டும்’ என்று, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2001-ஆம் ஆண்டு அறிவித்தது. ‘தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டை உருவாக்க வேண்டும், இந்திய மக்கள் அனைவரும் அந்தப் பதிவேட்டில் தங்களைக் கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அந்தப் பதிவேட்டின் அடிப்படையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும்’ என்பது அன்றைய அரசின் முடிவு. சட்ட விரோதமான குடியேற்றத்தைத் தடுப்பது என்ற நோக்கத்துடன்தான் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்காக 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தில் 2003 -ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, புதிய குடியுரிமை விதிகள் கொண்டு வரப்பட்டன.அதன்படி,

தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் பதிவு செய்வது கட்டாயம் என்றும், பதிவு செய்யப்பட்ட பெயர்களுக்கு தேசிய அடையாள எண் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், 2003-ஆம் ஆண்டு விதிகளில் மாற்றம் எதுவும் கொண்டு வரப்படாமலே பயோ மெட்ரிக் முறையும், தனிப்பட்ட தகவல்களைத் தர வேண்டும் என்ற நிர்பந்தமும் இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

விரல் ரேகைப் பதிவுகள் மற்றும் கருவிழிப் பதிவுகள் போன்ற அடையாளங்களைப் பதிவு செய்யும் போதும், பிறகு சரிபார்க்கப்படும் போதும் தவறுகள் நிகழவே நிகழாது என்று எந்த நிச்சயமும் இல்லை. வளர்ந்த நாடுகள் பலவும் கூட பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்த முயன்று பின் கைவிட்டிருக்கின்றன. கடினமான உடல் உழைப்புத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், ரசாயனப் பொருட்களைக் கையாள்பவர்கள், சிறு வயதினர், முதியவர்களின் விரல் ரேகைகளைச் சரியாகப் பதிய முடியவில்லை என்று பல இடங்களில் புகார் வந்திருக்கிறது.

தவிர, விரல் ரேகை, கருவிழிப் பதிவுகள் எல்லாம் மாற்றமே இல்லாமல் ஒரே மாதிரி காலாகாலத்திற்கும் நிலைத்திருக்கக் கூடியவை அல்ல. உடல் நிலை, சுற்றுச்சூழல் இவற்றால் ஏற்படக் கூடிய மாற்றங்களுக்கு அவையும் உட்பட்டவையே. இந்த மாற்றங்கள் சிறிதாக இருந்தாலும், அடையாள அட்டையில் பதிவு செய்யப்பட்ட அடையாளங்களுடன் பிற்காலத்தில் அது ஒத்துப் போகாமல் நிராகரிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
தவிர, இப்போது ஆதார் அடையாள அட்டைக்காகத் திரட்டப்படும் தனிப்பட்ட தகவல்கள், ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்ற உத்திரவாதமும் இல்லை. அரசுக்கு கட்டணம் செலுத்தி விட்டு, இந்தத் தனிப்பட்ட தகவல்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு பற்றி ஆராய வேண்டும் என்று திட்டக் கமிஷனின் குழு ஒன்று 2006-ல் கருத்து தெரிவித்திருக்கிறது. தனி நபரின் ஒப்புதல் இல்லாமல் அவரது தனிப்பட்ட தகவல்களை பணத்திற்காக தனியார் நிறுவனங்களுக்குத் தருவது சட்டப்படி சரியா? அந்தத் தகவல்களை ஒரு வர்த்தகப் பொருளாக்குவதற்கு சமம் அல்லவா என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

மக்கள் தொகை விவரம் என்பது மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்புடையது. அது தொடர்பான தகவல்களைத் திரட்டுவதும், பாதுகாப்பதும் அந்தத் துறையைச் சார்ந்த ரெஜிஸ்ட்ரார் ஜெனரல் ஆஃப் இந்தியாவின் பொறுப்பில் உள்ளது. அந்த வகையில் தேசிய அடையாள அட்டையையும், தனி நபர் குறியீட்டு எண் வழங்குவதும் கூட மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்ததுதான். தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் அடிப்படையில் பயோ மெட்ரிக் அடையாள அட்டைகளை வழங்குவது என்று அரசு முடிவு செய்தபோது, அதற்காக உள்துறை அமைச்சகத்திற்கு தொழில்நுட்ப நிபுணத்துவம் அளிப்பதற்காக ‘யுனிக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டி’ என்ற அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
‘இன்ஃபோசிஸ்’ என்ற பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைத் துவக்கியவர்களில் ஒருவரான நந்தன் நிலேகணீயைத் தலைவராகக் கொண்டு அந்த அமைப்பு தொடங்கப்பட்டது. தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில், ஒரே நபர் ஒன்றுக்கும் அதிகமான முறை தன்னைப் பதிவு செய்து கொண்டிருந்தால், அந்தத் தவறுகளை நீக்கி, ஒவ்வொருவருக்கும் தனியான குறியீட்டு எண்ணை அந்த அமைப்பு வழங்கும். அந்த அமைப்பின் புள்ளி விவரங்கள் அனைத்தும் தனது பொறுப்பில் உள்ள, தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் ஒரு அம்சமாகிவிடும் என்று உள்துறை அமைச்சகம் 2008 வாக்கில் அறிவித்தது.

அதாவது, உள்துறை அமைச்சகத்தின் ஒரு அங்கமான ரெஜிஸ்ட்ரார் ஜெனரல் ஆஃப் இந்தியாவிடம் உள்ள இந்திய மக்கள் தொகைப் பதிவேட்டில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு தனிக் குறியீட்டு எண்ணை வழங்கும் நோக்கத்திற்காக, யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டி ஏற்படுத்தப்பட்டது. ஆனால், யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டி, உள்துறை அமைச்சகத்திற்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக செயல்படத் துவங்கி விட்டது. தனது நிதித் தேவைகளுக்காக நிதியமைச்சகத்தை நேரடியாக தொடர்பு கொள்கிறது. யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டியே அடையாள அட்டைகளை வழங்க முடிவு செய்தது. அரசும் முதல் கட்டமாக 20 கோடி அடையாள அட்டைகள் வழங்க அனுமதி அளித்தது. இதற்காக 3023 கோடி ரூபாய் வேறு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டி திரட்டும் தகவல்களின் நம்பகத் தன்மை குறித்து, உள்துறை மந்திரி ப.சிதம்பரம் சந்தேகத்தைக் கிளப்பி உள்ளார். 20 கோடி பேர்களிடம் மட்டுமே விரல் ரேகைப் பதிவு, கருவிழிப் பதிவு மற்றும் புகைப்படம் எடுப்பது ஆகியவற்றுக்காக 3000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டி செலவிடுவதைப் பற்றி திட்டக் கமிஷன் கேள்வி எழுப்பியுள்ளது. திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டியில் நடக்கும் குளறுபடிகள் குறித்து கவனிக்கும்படி உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டியின் செயல்பாடுகள் குறித்து, குறிப்பாக அதன் செலவினங்கள் குறித்து தணிக்கை செய்ய கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் துவங்கியுள்ளது. அதற்கு யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனினும் சி.ஏ.ஜி. அறிக்கை தரும்போது பல கேள்விகள் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அடையாள அட்டை குளறுபடிகள் !

புனேவைச் சேர்ந்த ஒருவருக்கு தனிக் குறியீட்டு எண் கொண்ட அடையாள அட்டை கிடைத்தது. அதில் அவரது புகைப்படத்திற்குப் பதில் அவரது மனைவியின் புகைப்படம் பதிவாகி இருந்தது. இதுபோல் ஆண்களைப் பெண்களாகவும், பெண்களை ஆண்களாகவும், குழந்தைகளைப் பெரியவர்களாகவும், பெரியவர்களை குழந்தைகளாகவும் பதிவு செய்துள்ள சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

* போலி ஆதார் அடையாள அட்டைகளை வழங்கியதாக, பெங்களூரில் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

* ஆதார் அடையாள அட்டைக்காக தகவல்களைத் திரட்டிப் பதிவு செய்ய உரிமை வழங்குவதாக ஒரு நிறுவனம், ரூபாய் 2,50,000 வீதம் பல நிறுவனங்களிடம் பணம் திரட்டுவதாக யுனிக்ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டிக்குப் புகார்கள் வந்தன.

* தெற்கு மும்பையில் உள்ள Colaba-வைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களின் முகவரி மஹாராஷ்டிர மாநிலம் ரெய்கார் மாவட்டத்தில் உள்ள Kolaba என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

* குரூப் ஏ கெஸட்டட் அதிகாரி, தனது லெட்டர் ஹெட்டில் சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படத்தை ஒட்டி சான்று அளித்தால், அதை ஆதார் அடையாள அட்டைக்காக பதிவு செய்து கொள்ள பயன்படும் ஆவணங்களில் ஒன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பெங்களூர் திலக் நகரில் உள்ள மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு டாக்டர், ஒரு சான்றிதழுக்கு நூறு ரூபாய் கட்டணம் என்ற முறையில் கையெழுத்திட்டு, சம்பந்தப்பட்ட நபர்களை கண்களால் கூட பார்க்காமல் இடைத்தரகர் மூலம் சான்றிதழ் தந்தது தெரிய வந்தது.


* ரேஷன் அட்டையில் தொடங்கி, வங்கியில் கணக்கு தொடங்குவது வரை எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே அடையாளமாக, ஆதார் அடையாள அட்டை இருக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆதார் அடையாள அட்டையை வங்கிகள் ஆதார ஆவணப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று 2010-ல் அரசு அறிவித்தது. ஆனால், 2011 செப்டம்பரில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் ஆதார் அடையாள அட்டையின் அடிப்படையில் துவக்கப்படும் கணக்குகளுக்கும் கூட, வாடிக்கையாளர்களிடம் இருந்து இருப்பிடச் சான்றிதழைப் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறது. 

ஒரு வளமான எதிர்காலத்தை நோக்கி.?!

Friday, 11 November 2011

தலை சுற்றும் கணக்கு !!!! நமக்கு இது தேவைதானா?

ரஷிய நாட்டின் உதவியோடு தமிழகத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணுமின் நிலையத்தின் பணிகள் இப்போது மக்கள் சக்தியால் சற்று முடங்கிக் கிடக்கின்றன.1992-ம் ஆண்டு நடைபெற்ற தென்மாநில முதல்வர்களின் மாநாட்டில் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்க ஒத்துக்கொண்டதுடன், அங்கு உற்பத்தியாகும் மின்சக்தியைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளவும் முடிவு செய்ததுதான் தமிழகம் செய்த முதல் தவறு.

ஆந்திர மாநிலம் நாகார்ஜூனசாகர் மற்றும் கேரள மாநிலம் பூதான்கெட்டு பகுதிகளில் நிறுவப்பட உத்தேசிக்கப்பட்ட ஒரு பெரிய திட்டம், அம்மாநில மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பால் இடம்பெயர்ந்து தமிழகக் கரையோரமான கூடங்குளத்தில் நிலைகொண்டு, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. தத்தமது மாநிலங்களில் அணுமின் நிலையத்தை நிறுவ எதிர்ப்புத் தெரிவித்த கேரளம், ஆந்திரம், கர்நாடக அரசுகள், அணுமின் நிலையம் அமைப்பதற்காக தமிழகத்தைக் கைகாட்டிவிட்டு ஒதுங்கிக் கொண்டதில் இருந்தே அந்த மாநிலங்களின் ராஜதந்திரம் புரியும்.உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் மின்சக்தியில் சுமார் 4 சதவிகிதம் மட்டுமே அணுமின் நிலையத்தின் மூலம் பெறப்படுகிறது என்ற நிலையில் இதுபோன்ற அணுமின் நிலையங்கள் தேவைதானா என்ற குரல் உலகம் முழுவதுமே மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

கடற்கரையோரம் நிறுவப்படும் அணுமின் நிலைய உலைகளைக் குளிர்விக்கும், கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றும் ஆலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகளையும் கடலில் கொட்ட வேண்டிய நிலையில் கடல் வளம் பாதிக்கப்படாதா?கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் உவரி முதல் கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் வரையுள்ள கடலோரக் கிராமங்களிலுள்ள மீனவர்களின் நிலை என்ன?கடலில் கலக்கும் கதிர்வீச்சு கழிவுகளால் மீன் உள்ளிட்ட கடல் வளங்கள் பாதிக்கப்படும் நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரம் நிச்சயம் பாதிக்கும்.மேலும் இந்த அணுமின் நிலையத்துக்குத் தேவைப்படும் தண்ணீர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அணையிலிருந்து கொண்டு வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்குப் போதிய தண்ணீர் வசதி கிடைக்காத நிலையில் விவசாயமும் பாழாகும்.

அணுஉலைக் கழிவுகளிலிருந்துதான், அணு ஆயுதம் தயாரிக்க உதவும் புளுட்டோனியம் பெறப்படுகிறது.கல்பாக்கம், தாராப்பூர் ஆகிய அணுமின் நிலையங்களிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 1,000 கிலோ புளுட்டோனியம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு ஸ்பூன் புளுட்டோனியம் 300 கோடி பேருக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் என்கிறது ஆய்வு.அப்படி என்றால் 1,000 கிலோ புளுட்டோனியம் மூலம் என்னவெல்லாம் நடக்கும்? கணக்குப் பார்த்தால் தலை சுற்றுகிறது.இப்படி பல்வகை பிரச்னைகளை ஏற்படுத்தும் அணுஉலைக் கழிவுகளை எங்கே கொண்டு போய்ச் சேர்ப்பது என்பது மிக முக்கியமான விஷயம்.

கூடங்குளம் அணுமின் நிலையம் ஆண்டுக்கு 30 டன் யுரேனியத்தைப் பயன்படுத்தும் நிலையில் சுமார் 20 ஆண்டுகள் உலை இயங்கும் நிலையில் சுமார் 600 டன் கழிவு வெளியாகக் கூடும். இந்தக் கழிவை நாம் பாதுகாப்பாக பல ஆயிரம் ஆண்டுகள் வரை வைத்திருக்க வேண்டும். இது இயலுமா?இந்தக் கழிவுகளால் கடல் நீர் மாசடையும். மேலும் அணு உலையிலிருந்து வெளியாகும் நீராவி, புகை வடிவிலான கழிவுகள் மனிதனின் வியர்வை, சுவாசம் என ஒவ்வோர் அணுவிலும் புகுந்து அணுவின்றி எதுவும் அசையாது என்ற சொல்லுக்கு வலு சேர்ப்பதுபோல் உடலின் ஒவ்வொரு மூலக்கூற்றினையும் துவம்சம் செய்யாதா?

இதையும் தாண்டிச் சிந்தித்தால், உலையில் வெடிப்பு ஏற்பட்டால், சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதன் பாதிப்பு இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அப்படி என்றால் அதன் பாதிப்பு கேரள மாநில எல்லை முதல் மதுரை வரை இருக்குமே. இந்த பரந்து விரிந்த பகுதிகளில் வாழும் மக்கள், கால்நடைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள், விவசாய நிலங்கள் அனைத்தையும் பாதுகாப்பது என்பது அரசுகளால் சாத்தியமாகக்கூடிய விஷயமா என்றால் நிச்சயம் இல்லை.விஞ்ஞானத்தில் வளர்ந்த ஜெர்மனி போன்ற நாடுகளே அணுமின் திட்டங்களை முடக்குவதற்கு உத்தேசித்துள்ள நிலையில் வளர முயன்று வரும் இந்தியாவுக்கு, நமக்கு இது தேவைதானா?

திசையெட்டுமா தமிழ் படைப்பு?


பாரதியும் தாகூரும் மகாகவிஞர்கள். ஆனால், தாகூருக்குக் கிடைத்த பெருமையும் அங்கீகாரமும் பாரதிக்குக் கிடைக்காமற் போனதற்கு என்ன காரணம்? இன்றுவரை பாரதியின் மொத்த படைப்புகள் ஆங்கிலத்தில் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை.

பாரதியின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழகத்தைக் கடந்து இந்தியா முழுக்கவோ, உலகம் முழுக்கவோ இதுவரை செல்லவில்லை. தாகூருக்குக் கிடைத்த உயரம் அவர் உலக மொழிகளிலெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டதுதான். பாரதிக்கு இதுவரை இப்பேறு கிடைக்கவில்லை.

தமிழின் பெருமையை உணர்ந்த பிறநாட்டு அறிஞர்கள்தான் தமிழை உலக நாடுகளுக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஜி.யு. போப் திருக்குறளையும் திருவாசகத்தையும் மொழிபெயர்த்தார்.

பைபிளுக்கு அடுத்து, காரல் மார்க்ஸின் மூலதனமும் மூன்றாவதாக திருக்குறளும் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டவை என்று கூறுவார்கள். அது உண்மையோ இல்லையோ, உலக மொழிகளுக்குக் கொண்டு செல்ல ஜி.யு. போப் என்ற கிறித்தவப் பாதிரியாரே காரணமாயிருந்தார்.

பெஸ்கி என்ற வீரமாமுனிவர் திருக்குறளின் அறத்துப்பாலையும் பொருள்பாலையும் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். மாக்ஸ்முல்லர் இந்திய ஆய்வியலைத் தொடங்கிவைத்தார். ராபர்ட் கால்டுவெல் திருநெல்வேலி வரலாற்றையும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தையும் ஆங்கிலத்தில் எழுதித் தமிழை உலக நாடுகளுக்குக் கொண்டு சென்றார்.

இவர்கள் தொடங்கி தமிழின் செழுமை மேல் ஈர்க்கப்பட்ட ஏராளமான ஐரோப்பியர்கள் தமிழ் இலக்கியத்தை ஆங்கிலத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். இம்முயற்சிகளெல்லாம் 19-ம் நூற்றாண்டு வரை மட்டுமே தீவிரமாக நடைபெற்றன.

ஏ.கே. ராமானுஜன் அரிய முயற்சி செய்து சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். நம் பழந்தமிழ் இலக்கியங்கள் சென்ற அளவுக்குக்கூட இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படவில்லை. தமிழின் முகம் பழைய முகமாய் பல நேரங்களில் வெற்றிடமாய் உள்ளது.

இன்று ஆங்கிலத்தின் ஊடாகவே சகல அங்கீகாரமும் அடையாளங்களும் சாத்தியமாகின்றன. வட்டார மொழியில் எழுதப்படும் மிகச்சிறந்த இலக்கியங்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்போதே கவனிப்புக்கு உள்ளாகின்றன. உதாரணத்துக்கு இன்று உலகம் முழுவதும் அறியப்படுகின்ற ஆப்பிரிக்க இலக்கியத்தைக் கூறலாம்.

ஆங்கிலம் தரும் அங்கீகாரம் பெரும் விவாதங்களையும் கிளப்புகிறது. சொந்த மண்ணைவிட்டு, பிழைப்புக்காக பலகாலமாய் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் மண்ணைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். அதற்குப் பேரளவு அங்கீகாரமும் பொருளாதாரப் பலனும் உடனடியாகக் கிடைக்கின்றன. ஆனால், சொந்த மண்ணிலேயே வாழ்ந்துகொண்டு, அந்த மண் தரும் ஏற்ற இறக்கங்களைத் தாங்கிக்கொண்டு, அந்த மண் பற்றி எழுதும் எழுத்தாளர்களுக்குக் கவனிப்பும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை. ஆர்.கே. நாராயணனின் மால்குடி நாள்களும், தி.ஜா.வின் காவிரி மண் பற்றிய பல நாவல்களுக்கும் இடையில் உள்ள அங்கீகார பேதம் இதற்கு ஓர் உதாரணம்.

சென்ற ஆண்டு தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் எழுத்தாளர்களின் சந்திப்பில், விவாதத்தின் மையப் புள்ளியாக இக்கருத்தே அமைந்தது. வட்டார வாழ்வியலைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர்கள் பெரும் புகழைச் சம்பாதிக்கின்றனர்.

குறிப்பாக சொந்த நாட்டில் வசிக்க நேராது; வெளிநாடுகளில் வாழும் ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர்கள் எழுத்தின் மூலம் உலகச் சந்தையில் முன்னணி எழுத்தாளர்களாக அணிவகுக்கின்றனர்.

அதேநேரத்தில், தமிழ்நாட்டில் வாழும் ஒரு படைப்பாளி தன்னை நிலை நிறுத்திக்கொள்ள மூன்று விதமான போராட்டங்களில் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கிறது. ஒன்று - தன் படைப்பை மொழிபெயர்ப்பின் மூலமாக ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளுக்குக் கொண்டு செல்வது; இரண்டு - தன் நாட்டில் உள்ள பிறமொழி இலக்கியவாதிகளுடன் ஒப்பிட்டு தன் இடத்தை நிலைநாட்டுவது; மூன்று - உலகளாவிய எழுத்துச் சந்தையைச் சென்றடைவது.

காலத்தின் கோலத்தால் மேற்குறிப்பிட்ட மூன்றுமே ஒரு தமிழ் எழுத்தாளருக்கு அவர் வாழும் காலத்திலும் அவருக்குப் பின்னாலும் கிடைப்பதில்லை. பாரதி தொடங்கி இன்றைக்குள்ள எழுத்தாளர்கள் வரை இதுவே பலவீனம்.

இந்திய இலக்கியங்கள் குறித்து நடைபெறும் கலந்துரையாடல்களில் தமிழ் இலக்கியத்துக்குப் போதுமான அளவு முக்கியத்துவமோ, பங்களிப்போ இருப்பதில்லை. தமிழ் இலக்கியத்தின் சமகாலப் போக்குகள் குறித்து தெளிவான பார்வையோ, புரிதலோ, இந்தியாவில் உள்ள பிறமொழி இலக்கியகர்த்தாக்களுக்கும் வாசகர்களுக்கும் இல்லை. ஐம்பதாண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் எழுத்தாளர்களையே அவர்கள் அறிந்துள்ளனர்.

காமன்வெல்த் எழுத்தாளர் சந்திப்பில்கூட நா. பார்த்தசாரதி, அகிலன், கல்கி, கடைசியாக புதுமைப்பித்தன் ஆகியோரே முன்வைத்துப் பேசப்பட்டனர். தமிழ் மட்டும் இந்திய இலக்கியத்தில் தனித்தீவாக இயங்கக் காரணமென்ன?

கடந்த பத்தாண்டுகளில் எழுத வந்த மலையாள, கன்னட எழுத்தாளர்கள் பெயர்களை இந்தியா முழுக்க அறிந்துள்ளனர். ஆனால், தமிழ் எழுத்தாளர்கள் அறியப்படாதது ஏன்?

என்னால் புரிந்துகொள்ளக் கூடிய காரணங்களில் சில: தமிழகம் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் மாநில மொழியோடு இந்தியும், ஆங்கிலமும் உள்ளன. மாநில மொழியில் வெளியாகும் படைப்புகள் உடனடியாக இந்திக்கு, ஆங்கிலத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இந்தியின் வழி மொத்த இந்தியாவையும் அப்படைப்பு சென்றடைகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் முண்டா இனப்போராட்டத்தைப் பற்றிய பாடலுடன் ஆந்திரத்தின் தெலங்கானாப் பகுதி படைப்பாளி தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு வரவேற்க முடிகிறது. சமகால இலக்கியக் கோட்பாடுகளை அவர்கள் ஒருவருக்கொருவர் நன்றாக அறிந்து கொள்கின்றனர். இந்தி வழி நம் படைப்புகள் செல்வது அறவே இல்லை அல்லது மிக அரிது.

அடுத்து மொழியாக்கங்கள் பெரும்பாலும் கல்வி நிறுவனங்களையும் பிற அமைப்புகளையும் சார்ந்துள்ளன. பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் உள்ளவர்கள் இலக்கியப் போக்கின் சமகாலப் போக்குகளை அறிந்திராதவர்கள். பலருக்குக் கோபம் வந்தாலும் 90 சதவீதம் உண்மை இதுவே.

குறிப்பாக, ஆங்கிலப் பேராசிரியர்களுக்குத் தமிழின் இலக்கியப் போக்குகள் குறித்து கொஞ்சமும் தெரியவில்லை. ஆங்கில இலக்கியத்தின் ருசியை மட்டுமே சுவைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் பேராசிரியர்கள், தமிழ் இலக்கியத்தை ஆங்கில மொழிக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சிகளை மேற்கொள்வதேயில்லை.

இன்று தமிழில் நடைபெறும் அரிய முயற்சிகள் தனி நபர்களாலேயே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. பிற மாநிலங்களில் நடைபெறும் இலக்கிய ஆய்வரங்குகள், கருத்தரங்குகளுக்குக் கல்வியாளர்கள்தான் அழைக்கப்படுகிறார்கள். கல்வியாளர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் ஏழாம் பொருத்தம்.

கன்னடத்தைப் போன்றோ, மலையாளத்தைப் போன்றோ தமிழில் இருவரும் ஒருசேரப் பயணித்ததேயில்லை. பல பல்கலைக்கழகங்களின் தமிழிலக்கிய பாடங்கள் சமகாலத்தவையாக இருப்பதுமில்லை.

நமக்கு நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களின் எழுத்துகள் உடனுக்குடன் தமிழில் கிடைக்கின்றன. இந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் வெளியானவுடன் மொழிபெயர்க்கப்படுகின்றன. ஆனால், நம்முடைய புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், ஜெயகாந்தன், ராஜம் கிருஷ்ணன், ஆர். சூடாமணி, பிரபஞ்சன், பெருமாள்முருகன், ஜெயமோகன், எஸ். இராமகிருஷ்ணன், அழகிய பெரியவன், சு. வேணுகோபால், சு. தமிழ்ச்செல்வி, சு. வெங்கடேசன் உள்ளிட்ட படைப்பாளிகள் எப்பொழுது இந்தியத்தை, உலகத்தை அடைவது? தம்மின் அங்கீகாரத்துக்காகப் படைப்பாளியையே வழி தேடச் சொல்வது பெருத்த சமூக அவமானம்.

தமிழுக்கென்று தனி சாகித்ய அகாதெமி கொண்டு வர முடியாதது தமிழின் பலவீனம் அல்ல; தமிழர்களின் பலவீனம். தமிழ் சாகித்ய அகாதெமி அமையுமானால், தமிழ் படைப்பாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதோடு, தமிழ் மொழிபெயர்ப்புக்கென்று சிறப்பாகச் செயல்படும் நிறுவனமாக அந்நிறுவனத்தை அமைக்க முடியும்.

மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மையம் மைசூரிலிருந்து இடம்பெயர்ந்து சென்னையில் செயல்படத் தொடங்கியிருக்கிறது. தமிழாய்வுப் பணிகளைச் சிறப்பாகச் செய்யும் அந்நிறுவனம், தமிழின் அரிய நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிடுகிறது. பழந்தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பை ஊக்குவிக்கும் இந்நிறுவனம் சமகால இலக்கிய மொழிபெயர்ப்புப் பணியிலும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். மொழிபெயர்ப்பில் ஈடுபடுகின்ற தனிநபர்களுக்கு நிதியுதவி தந்து ஊக்கப்படுத்தலாம்.

ஆந்திர மாநிலம் குப்பத்தில் செயல்படும் திராவிடப் பல்கலைக்கழகம், தென்னிந்திய மொழிகளில் மொழிபெயர்ப்புகளை அதிகப்படுத்தலாம். குறைந்தபட்சம் தென்னிந்திய மொழிகளின் இலக்கியப் பரிவர்த்தனைகளை மட்டுமாவது உறுதிசெய்ய முடியும். திராவிடமொழி சார்ந்து ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அரசு இப்பணியைச் செய்ய முன்வர வேண்டும். பள்ளிக்கல்வித்துறை, பாடநூல் நிறுவனம் போன்ற கல்விசார்ந்த பணிகளை முன்னெடுக்கும் அரசு, இலக்கியத்துக்காகவும், மொழிபெயர்ப்புக்காகவும் ஒரு தனித்துறையை உருவாக்கலாம். 1960-கள் தொடங்கி 1980-கள் வரை தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் தமிழிலக்கியம், வரலாறு சார்ந்து வெளியிட்டுள்ள 700-க்கும் அதிகமான நூல்கள் இன்றும் பாராட்டுக்குரியவை. தமிழ் இலக்கியத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்பவை.

அரசின் இலக்கியத்துறை அமையும்போது, படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்களுக்கான ஆதரவும், நிதியுதவியும் பெருமளவில் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அரசு தன் மொழி வளர்ச்சிக்காகப் படைப்பாளிகள் பின்நிற்கும்போது கிடைக்கும் ஆன்ம பலம் மிகப் பெரியது.

அதியமான் தனக்குக் கிடைத்த அரிய நெல்லிக்கனியை ஒüவைக்குக் கொடுக்கவே முன் வந்தான். ஒüவையை மரணத்திலிருந்து காப்பது மட்டுமல்ல, அதியமானின் நோக்கம். மரணத்தை வெல்லும் பெரும் படைப்புகளை ஒüவை படைக்க வேண்டும் என்ற பேரவாதான் காரணம். படைப்பை வாழவைப்பதே படைப்பாளியை வாழவைப்பது. படைப்பைத் திசையெட்டும் உள்ள வாசகனுக்குக் கொண்டு செல்வதே படைப்பாளியை நித்தியத்துவம் பெற வைக்கும் வழியாகும். அதியமான் கை நெல்லிக்கனியை அரசு கைக்கொள்ளுமா?

Saturday, 5 November 2011

இந்தியாவின் அரசியல் பொருளாதாரம்

ந்தியாவில் ஆங்கிலேயர்கள் வரும்போது பல்வேறு வகையான விவசாய முறைகள் இருந்தன. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நிலவரி வசூல் செய்வதற்கான உரிமையை ஏலம் விட்டனர். ஏலத்தில் பல இடங்களில் நிலவரி வசூல் செய்யும் போது, வரி செலுத்த முடியாத விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்றினர். இது நம்முடைய பாரம்பரியத்தில் இல்லாத ஒன்று. ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இங்கு ஓர் அரசு இருந்தது.

அந்த அரசு நிலவரி விதித்தது. அந்த வரியை ஜமீன்தாரர்கள் வசூலித்தார்கள். அதில் சிறு பகுதி ஜமீன்தார்களுக்கும், பெரும்பகுதி அரசுகளுக்கும் சென்றது. அந்த வரியை வைத்து நகரங்களில் தொழில்களைத் தொடங்கினர். காலனிய ஆட்சி யில் உறிஞ்சப்பட்ட உபரி இங்கிலாந்தின் முத லாளித்துவ வளர்ச்சிக்கு உதவியது. இந்தியாவில் உறிஞ்சப்பட்ட உபரி பத்து சதவீதமாக இருக் கலாம் என்று கூறுகின்றனர். இந்தப் பத்து சதவீதம் என்பது பிரிட்டனின் மூலதனத்தில் மூன்று சதவீதமாக இருக்கலாம்.

இந்த மூன்று சதவீதம் என்பது அன்றைய பிரிட்டிஷில் கணிசமான பங்கு ஆகும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் பேசும்போது காலனி ஆதிக்கத் தைப் பற்றி கூறும்போது இருபெரும் நாகரீகங்கள் சந்தித்துக் கொண்டது என்று சொன்னார். இது ஓர் ஈனமான செயல் என்றே சொல்ல வேண்டும். அடிமை மனப்பான்மையைக் காட்டக்கூடிய செயல் அல்லவா இது. வரிவசூல் செய்யக்கூடிய ஜமீன் தார்களை புதிய முதலாளிகளாக பிரிட்டிஷ் முதலாளி வர்க்கம் உருவாக்கியது. பிரிட்டிஷ் தொழில் வளர்ச்சிக்கு தேவையான வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய வகையிலே வேளாண் உற்பத்திகளை இங்கு மாற்றி அமைத் தது. உணவுப் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பணப்பயிரை பயிரிடுமாறு ஆங்கிலேய அரசாங்கம் அழுத்தம் கொடுத்தது. இதனால் விவசாயம், வணிகமயம் ஆகியது. ஆங்கிலேயர்கள் வரும்போது நிலமற்ற விவசாயி கள் இருந்தார்கள். அதற்கு முன்னாலும் இருந்தார் கள். ஏனெனில் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு நிலம் கிடையாது. ஆங்கிலேயர்கள் நிலப் பிரபுகளுக்கு ஆதரவாகவும் இருந்தனர். நிலப் பிரபுக்கள் ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந் தனர் என்பது நமக்கு வரலாற்றில் தெரியும்

. காலனிய ஆட்சியில் இங்குள்ள ஏராளமான தொழில்துறைகள் அழிக்கப்பட்டன. அவர் களுடைய மலிவான பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தனர். இதனால் பெரும் பாலான மக்கள் நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு புலம் பெயர்ந்தனர். விடுதலைக்கு முந்தைய ஆண்டுகளில் உணவு உற்பத்தி அரைசதம் கூட அதிகரிக்கவில்லை. அதே காலக்கட்டத்தில் மக்கள்தொகை 1 சதவீதம் அதிகரித்தது. இதனால் தலா உற்பத்தி குறைந்து கொண்டே வந்தது. விடுதலைக்கு பின்பு ஓர் எல்லைக்கு உட்பட்டு நிலச்சீர்திருத்தங்கள் செயல்பட்டன. அரசு மின்சாரம் உள்ளிட்ட கட்டமைப்பு துறைகளில் முதலீடு செய்தது. பாசனத்தை பெருக்கிற்று. ஐந்தாண்டு திட்டங்கள் வந்தன. பல்நோக்கு திட்டங்கள் வந்தன. இவற்றின் விளைவாக விவசாயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதன் பிறகு பசுமைப் புரட்சி வந்தது. இந்தப் பசுமை புரட்சியால் உற்பத்தித்திறனை அதிகப்படுத்தி மகசூல் அதிகம் பெறப்பட்டது. 1950 முதல் 1990 வரை இந்திய நாட்டில் முதலாளித்துவ வளர்ச்சியின் ஒரு பகுதியாக விவசாயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது என்பது உண்மை. தேசிய அளவிலான தானிய உற்பத்தி என்பது மக்கள் தொகை வளர்ச்சியை விட உயர்ந்தது.

60-களில் நம்முடைய தானிய உற்பத்தி குறைவாக இருந்தது. வாங்கும் சக்தியும் குறைவாக இருந்தது. அதனால் தானியங்களை இறக்குமதி செய்தோம். அயல்நாட்டு கொள்கையில் சுயேச்சையான கொள்கையை கடைப்பிடிக்க முடியாமல் இருந்தது. அப்போது அமெரிக்கா வியட்நாமில் போர் செய்து கொண்டிருந்தது. இந்தியாவில் அதைக் கண்டிக்க முடியவில்லை. ஏனெனில் அமெரிக்காவில் இருந்து உணவுப் பொருட்கள் கப்பலில் வரும் என்று காத்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பின்னணியில்தான் பசுமைப்புரட்சியைப் பற்றி முடிவுகள் எடுக்கப்பட் டது. விவசாயத்தின் நிலஉறவுகளை மாற்றாமல், அங் குள்ள பெரும் விவசாயிகளை மையப்படுத்தி, அவர்களுக்கு மானியம் கொடுத்து, நவீன உற்பத்தி முறைகளை பயன்படுத்தி, மகசூலை அதிகம் பெறுவது, பிறகு அவர்களைப் பார்த்து மற்றவர்களையும் பின்பற்ற வைப்பது என்பது வலுவானவர்களை முன் வைத்து எடுக்கப்பட்ட யுக்தி என்று சொன்னாலும்கூட புதிய தொழில் நுட்பம், பாசனம், உயர் மகசூல் விதைகள், பூச்சி மருந்துகள், வேதியியல் உரம் உள்ளிட்ட ஒரு நவீன உற்பத்திமுறையால் மகசூல் உயருகிறது. மகசூல் உயரும்போது சந்தையில் விலை சரியும். இந்த விலைச் சரிவை சரி செய்ய அரசு ஒரு கொள் முதல் அமைப்பை 1964-ஆம் ஆண்டில் உருவாக் கியது. இதன் மூலம் தானியங்களை இருப்பு வைக்கவும், திரும்ப விற்கவும், நியாயவிலைக் கடை சென்று கடைகோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்தது.

விவசாயத்திற்கான பொருட்களை வாங்கு வதற்கு கடன் அமைப்பில் மாற்றம் வந்தது. வங்கிகள் நாட்டுடமையாக்கமும் கூட்டுறவு கடன் வசதியும் பெருக்கப்பட்டன என்று அரசு பல முயற்சிகளை முன் நின்று மேற்கொள்ள வேண்டியிருந்தது. கட்டுபடியான விலையைக் கொடுத்து கொள்முதல், விவசாயம் செய்வதற்கு பயிர்க்கடன், நிலமேம்பாட்டு கடன், விவசாயிகள் கற்றுக்கொள்ள விவசாய விரிவாக்க அமைப்பு, விவசாயிகள் சொல்லக்கூடிய பிரச்சனைகளை தேசிய அளவில் எடுத்துச் சென்று தீர்வு சொல்வதற் காக ஓர் ஆராய்ச்சி அமைப்பு, நாடு தழுவிய விநியோக அமைப்பு போன்றவைகள் இல்லாமல் பசுமைப்புரட்சி நடந்திருக்க வாய்ப்பில்லை. பசுமைப்புரட்சி என்பது வெறும் தொழில்நுட்பம் சார்ந்த வி‘யம் இல்லை. அரசு விவசாயத்தில் பங்கு எடுத்து, முதலீடுகளை மேற்கொண்டு,

அமைப்புகளை ஏற்படுத்தி செய்யக்கூடிய வேலை. இந்தியா போன்ற பெரியநாட்டில் சந்தை இதைச் செய்திருக்காது. 60-களில் ஏற்பட்ட பஞ்சத்தால் ஏற்பட்ட நெருக்கடியால் இனி பஞ்சம் வந்தால் மேற்கொள்ள இவ்வாறு செய்யப்பட்டது. இதை ஏன் விரிவாக வலியுறுத்திச் சொல்கிறேன் என்றால் 90-களுக்குப் பிறகு இந்த ஏற்பாடுகள் அழிந்து கொண்டு வருகின்றன. புதியப் பொருளாதாரக் கொள்கையின் கீழ் கடுமையாக பாதிக்கப்பட்ட துறை விவசாயத் துறைதான்.

பதினைந்து ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் கூடியிருப்பதாக அரசு சொல்கிறது. தலா வருமானம் கூடியிருப்பதாக சொல்கிறது. ஆனால் குழந்தைகள் வயதுக்கு ஏற்ற எடை இல்லாமல் குறைவாக இருக்கிறார்கள். இந்த வி‘யத்தில் பங்களாதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளை விட நாம் பின்தங்கி இருக்கிறோம்.

நகர்ப்புறங்களில் கல்வி பெற்று வங்கி, காப்பீடு, நிதித்துறை, தகவல் தொழில்நுட்பம், மருந்து கம்பெனிகளில் வேலை செய்பவர்களை நீங்கள் நடுத்தர வர்க்கம் என்று கூறப்படுகிறது. இவர்களுடைய சிந்தனை எப்போதுமே தொழிலாளிகள் பக்கம் இருக்காது. ஆனால், உலகமயம் வந்த பிறகு நடுத்தர தொழிலாளிகள் மத்தியில் மாற்றம் வந்திருக்கிறது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு உலகமயத்தை ஆதரிக்க வேண்டியதுதான் வேறு வழியில்லை என்று இவர்கள் சொன்னார்கள். இப்போது அதன் தாக்கத்தை உணர்ந்து இருக்கிறார்கள். ஆனால், இதில் மற்றொரு பகுதியினர் 70, 80-களில் நுகர் பொருட்கள் வெளி நாட்டில் கிடைப் பது மாதிரி இங்கு கிடைப்பதில்லை என்று ஆதங்கப் பட்டு சைனா பஜா ரில் கடத்தப்பட்ட பொருட்களையும் வாங்கிக்கொண்டு இருந்தார்கள். உலக மயத் தால் இங்கே பொருட் கள் கிடைக்கிறது என்று திருப்திப்பட்டுக் கொள்கி றார்கள். கம்ப்யூட்டரையும், செல்போனையும் உலகமயத்தின் சாதனையாக இவர்கள் பார்க்கி றார்கள். புதிய தொழில்நுட்பங்கள் உலகமயத்தை சாத்தியப்படுத்தி இருக்கலாம். நிதித்துறை உலகமயத்தை இந்தத் தொழில்நுட்பங்கள் சாத்தியமாக்கியிருக்கின்றன. ஆனால், தொழில் நுட்பம் முன்னேற்றங்கள் என்பது உலகமயம்

அல்ல. நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியினருக்கு உலகமயம் வந்த காலகட்டத்தில் செல், கம்ப் யூட்டர், கலர் டெலிவி‘ன் வந்த காலமும் ஒன்றாக இருப்பதால் ஒருவித பிரம்மை வந்திருக்கிறது. இதை தகர்க்க வேண்டியிருக்கிறது.

உலகமயத்தில் நாடுகளுக்கிடையே உள்ள வணிகத்தையோ, வணிக உறவுகளையோ, மூலதன உறவுகளையோ நாம் மறுக்க வேண்டிய தில்லை. ஆனால், வல்லரசுகளின் மேலாதிக்கத்தில் பன்னாட்டு நிதி மூலதனங்களின் மேலாதிக்கத்தில் நிகழ்கின்ற உலகமயமாக்கல் என்பது ஏழை நாடுகளை சுரண்டுவதை எதிர்க்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் அங்கு தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளுக்கு அயல்நாட்டு மூலதனமும், உள் நாட்டு மூலதனமும் எப்படி செயல்பட வேண்டும் என்று வரைமுறைகளை உருவாக்க உரிமை உண்டு. இவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் உலகமயத்திற்கு கதவுகளைத் திறந்து விடுவது என்பது ஜனநாயகத்தை அவமதிக்கின்ற செயலாகும். அயல்நாட்டு மூலதனத்தை எந்த வரையறையும் இல்லாமல் திறந்து விட்டால் அந்த மூலதனம் வெளியேறிவிடும் என்ற அச்சத் தாலேயே ஆட்சியை நடத்த வேண்டியிருக்கிறது. பட்ஜெட் போடும்போது நிதி அமைச்சர்கள், பன்னாட்டு மூலதனக்காரர்கள் கோபப்படும் அளவிற்கு எதுவும் செய்யக்கூடாது என்றுதான் நினைக்கி றார்கள்.

நடுத்தர வர்க்கத்தின் சிந்தனையில் மாற்றம் என்பது சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சிக்குப் பிறகும்தான் வருகிறது. சீனா போன்ற நாடுகள் மேலை நாடுகளில் உறவு வைத்துக்கொண்டு தொழில் நுட்பங்களைப் பெறுவதும், அந்நிய மூலதனங் களை வரவழைப்பதும் என்று பார்க்கும்போது அவை எங்கிருந்து செய்யப்படுகின்றன என்று பார்க்காமல் உலகமயம் நல்ல வி‘யம். முன்னேற் றத்திற்கு வழிவகை செய்கிறது. ஒன்றிரண்டு கஷ்டங்கள் இருந்தாலும் நல்ல வி‘யம்தான் என்ற கருத்தோட்டத்திற்கு வந்து விடுகிறார்கள். அவர்களுடைய வாழ்நிலைத் தாக்கமும், ஊடகங்களும் இந்தக் கருத்தோட்டத்தை நடுத்தர வர்க்கத்துக்கு கொண்டு வந்தன. உலகமய சூழலில் நிலைமை மாறுகிறபோது ஊடகங்கள் சொன் னாலும் இவர்கள் கேட்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. உதாரணத்திற்கு இன் றைக்குத் தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள்.

வட மாநிலங்களை ஒப்பிடும்போது மனிதவள குறியீடு தமிழகத்தில் நன்றாக உள்ளது. இதில் கேரளா, பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்குவங்கம், மகாராஷ்டிரம் என்ற வரிசை உள்ளது. தமிழகத்தில் காலங்காலமாக நடக்கின்ற இயக்கங்களின் விளைவாக இருபெரும் திராவிடக் கட்சிகளின் போட்டியும் இதில் அடங்கியிருக்கின்றன. சமூகநலத் திட்டங்கள் நடைபெறுகின்றன. வறுமைக்கோடு என்ற அளவு இல்லாமல் எல்லோருக்கும் ரே‘னில் அரிசி கிடைக்கிறது. சராசரி கிராம மக்களின் வாழ்நிலை என்பது நிலம், குடிமனைப் பட்டா வைச் சார்ந்தது. இந்த இரண்டையும் அடை வதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. ஏராளமான அந்நிய முதலீடுகள் வருவதாக செய்திகள் வருகின்றன.

அரசு சொல்கிற இந்த முதலீடுகளால் எவ்வளவு பணியிடங்கள் உருவாக்கப்பட்டன? பணியிடங்களின் தன்மை என்ன? பணியிடங்கள் நிரந்தரமானதா? அன்றாட கூலிகளா அல்லது ஒப்பந்தத் தொழிலாளிகளா? என்ற விவரங்கள் எதுவும் கிடையாது. தேசிய புள்ளி விபரங்களை வைத்துப் பார்க்கும்போது தமிழக கிராமப்புறங் களில்தான் நிலமற்றவர்களின் சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. நகர்ப்புறக் கூலி, கிராமப்புறக் கூலி விகிதங்கள் பெருமளவுக்கு முன்னேறவில்லை. என்னுடைய சமீபத்திய ஆய்வில் பீகார், ஜார்க் கண்ட், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ஒரிஸா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மனித வள குறியீடு மிக மோசமாக இருக்கிறது.

ஒரு நாட்டில் உள்ள பணப்புழக்கத்திற்கும், உற்பத்திக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடை யாது. உதாரணத்திற்கு சில கோடி ரூபாய்களை அரசாங்கம் அச்சடித்துக் கொடுக்கிறது. அதற்கு சமமான தங்கம் இருக்கிறது என்பதெல்லாம் கற்பனை. நாம் கொடுக்கிற ரூபாய் நோட்டை வாங்கிக் கொண்டு பொருள் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கம் சட்டம் போட்டிருக்கிறது. பொருள் கொடுக்க முடியாது என்றால் சட்டப்படி தண்டிப்பதற்கு உரிமையுண்டு. அந்தத் தாளில், இந்தத் தாளை கொண்டு வருபவர் களுக்கு இவ்வளவு மதிப்பை தருகிறேன் என்று அச்சடித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் கையெழுத்திட்டு இருக்கிறார்.

இது ஒரு வாக்குறுதிதான். மக்களிடையே நம்பிக்கை இருக்கிறது. நாம் அந்த தாள்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒரு நேரத்தில் விலைவாசி ஏறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதாவது, கத்தரிக்காய் காலையில் 30 ரூபாயாகவும், மாலையில் 300 ரூபாயாகவும், இரவில் 1000 ரூபாயாகவும் விற்றால் இந்தப் பணம் என்ற தாளை யாருமே பயன்படுத்த மாட்டார்கள். இந்த மனநிலை சமீபத்தில் ஜெர் மனியில் ஏற்பட்டது. இப்போது ஜிம்பாவேயில் ஏற்பட்டிருக்கிறது. இதை அபரிமிதமான பணவீக்கம் என்று சொல்வர். இதற்குக் காரணம் ஏகப்பட்ட நோட்டுக்களை அச்சடித்து உற்பத்தியும் பெரு காமல், இருப்பதால் நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை ஏற்படாமல் போகும்.

நாணயத்தின் மதிப்பை நிர்ணயிப்பது என்பது ஏதோ ஓர் ஆண்டை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு சென்ற ஆண்டு நூறு ரூபாய் கொடுத்து என்ன பொருள் வாங்கினோமோ, அதே பொருளை இந்த ஆண்டு நூற்றி இருபது ரூபாய்க்கு வாங்க முடியும் என்றால் பணவீக்கம் இருபது சதவீதம் ஆகும். எனவே ரூபாயின் மதிப்பு குறைகிறது என்று அர்த்தம். ஆகவே ரூபாயின் மதிப்பை குறிப்பிட்ட ஆண்டை வைத்துத்தான் மதிப்பிட முடியும். பண வீக்கம் என்பது விலைவாசி உயர்வின் விகிதம். இப்போது செய்தித்தாள்களில் பணவீக்கம் 15-லிருந்து எட்டு ஆகிவிட்டது. இது சாதனை என்று அரசாங்கம் சொல்கிறது. ஆனால் பொருள்களின் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. இதனால் பணவீக்கம் குறைந்து இருக்கிறது. ஆனால் விலைவாசி குறையவில்லை. விலைவாசி ரூபாயின் மதிப்பை குறைக்கிறது.

வெளிநாட்டைப் பொறுத்தவரை டாலருக்கு ரூபாயின் மதிப்பு என்ன என்று கேட்கிறோம். இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால் மேலை நாடுகளில் ஏராளமான கடன் பெற்றிருக்க கூடிய நிதி நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்திருந்த பணங்களை எடுத்துச் செல்கின்றன. இதனால் ஏராளமான அந்நிய நாட்டுப் பணங்கள் வெளியேறுகின்றன.

அவர்களிடம் இருக்கிற இந்திய ரூபாய்களை டாலராக மாற்றுகின்றனர். இதனால் டாலருக்கு கிராக்கி கூடுகிறது. ரூபாயின் மதிப்பு சரிகிறது. நாம் இறக்குமதி செய்கிற பொருள் ரூபாய் மதிப்பில் அதிகமாகும். ஆகவே பணவீக்கம் அதிகமாகும்.

சுற்றுச்சுழலின் நண்பர் திம்மக்கா

சுற்றுச்சுழலின் நண்பர் திம்மக்கா

கர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் இருந்து தும்கூர் போகும் வழியில் 25 வது கிலோமீட்டரில் வருகிறது கூதூர் கிராமம்.
அதுவரை வறண்டு வெப்பமாகக் காணப்பட்ட பூமி குளிர்ந்து காணப்படுகிறது, அதற்கு காரணமான ஆயிரத்திற்கும் அதிகமான ஆலமரங்கள் அழகு காட்டி சாலையின் இருபக்கங்களிலும் இருந்து காற்றை வீசி வரவேற்கிறது. மரங்களில் உள்ள பல்வேறுவித பறவைகள் தங்கள் மொழியால் கீதம் பாடி வரவேற்கின்றன, மொத்தத்தில் மரங்கள் அடர்ந்த அந்த திடீர் சோலைவனம் மனதை சிக்கென பறிக்கிறது.
எங்கும் இல்லாத அளவிற்கு, எங்கு இருந்து வந்தன இத்தனை ஆலமரங்கள், யார் கொண்டுவந்தது நட்டது, அதைவிட யார் இவ்வளவு சிரத்தை எடுத்து பராமரித்தது என்ற பல கேள்விக்கு எல்லாம் விடைதான் , எழுதப்படிக்கத்தெரியாத திம்மக்கா.
யார் இந்த திம்மக்கா என்பதை அறிய சில வருடங்கள் பின்னோக்கி பயணிக்கவேண்டும்
சாதாரண கிராமத்து ஏழைப்பெண்ணான திம்மக்கா வாக்கப்பட்ட கிராமம்தான் கூதூர்.
சிக்கண்ணா என்ற விவசாய தொழிலாளியின் வாழ்க்கைத் துணையான திம்மக்காவிற்கு குழந்தை பாக்கியம் இல்லாது போனது, இதை காரணமாக்காட்டி உற்றமும், சுற்றமும் கொட்டிய வார்த்தைகளால் திம்மக்கா ரொம்பவே காயப்பட்டுவிட்டார். இரவுகளை தூக்கம் இல்லாமலும், பகல்களை உணவு இல்லாமலும் கழித்தார். ஆனாலும் எதுவும் ஆறுதலாக இல்லை மேலும், மேலும் துக்கம் துரத்திட, இப்படியே பத்து வருடங்கள் ஒடிப்போனது. இப்போது 80 வயதாகும் திம்மக்காவிற்கு அப்போது வயது 28.
பெற்று வளர்த்தால்தான் பிள்ளைகளா, உயிரும்,உணர்வும் உள்ள மரங்கள் பிள்ளைகள் இல்லையா, பெற்ற பிள்ளை கூட தாயை மட்டும்தான் கவனிக்கும், ஆனால் பெறாத பிள்ளைகளான மரங்கள், சுயநலமின்றி ஊரையே கவனித்துக்கொள்ளுமே என்றெல்லாம் யோசித்த திம்மக்கா மரம் நடுவது அதுவும் ஆலமரங்களை தொடர்ச்சியாக நடுவது என்று முடிவெடுத்தார்.
இவ்வளவு யோசித்த திம்மக்கா அந்த ஊரின் தண்ணீர் பஞ்சத்தை பற்றி யோசிக்க மறந்துவிட்டார், ஆனாலும் முன்வைத்து காலை பின்வைக்கப்போவது இல்லை என்ற முடிவுடன் நாலு கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று தண்ணீர் கொண்டுவந்து ஆலமரங்களுக்கு தண்ணீர் விட்டார்.
ஆரம்பத்தில் இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று கேலி செய்த கணவர் சிக்கண்ணா கூட ஆலமரசெடி இலைகளும், தலைகளும் விட்டு உருவாகி வருவதைப் பார்த்து தானும் திம்மக்காவிற்கு உதவலானார்.
வயல்காட்டில் வேலை செய்த நேரம் போக எப்போதும் ஆலமரம் நடுவது, நட்ட மரங்களை பேணி பாதுகாத்து வளர்ப்பது, வளர்ந்த மரங்களிடம் அன்பும், பாசமுமாகப் பேசுவது என்று மரங்களை தனது குழந்தைகளுக்கும் மேலாக வளர்த்தார்.
மரங்களை வளர்ப்பதற்காக ஊரில் நிறைய குட்டைகளை உருவாக்கினார், அதில் மழைக்காலத்தில் பெய்யும் தண்ணீரை தேக்கிவைத்து வெய்யில் காலத்தில் மரங்களுக்கு ஊற்றி பயன்படுத்தினார்.
அப்படியும் தண்ணீர் பற்றாமல் போகும்போது சிரமம் பாரமால் தலையிலும், இடுப்பிலும் குடங்களை சுமந்துகொண்டு தண்ணீர் சேகரிக்க புறப்பட்டு விடுவார். ஒரு சமயம் நாலுகிலோ மீட்டர் தூரம் போய் தண்ணீர் கொண்டுவந்தவர், மரங்களுக்கு அருகில் வரும்போது கால் தடுக்கி முள்ளில் விழுந்துவிட்டார். கை,கால்களில் ரத்தம். ஒ...வென்று அழுகை.பதறி ஒடிவந்த சிக்கண்ணா,‘ என்னம்மா ரொம்ப வலிக்குதா’ என்று கேட்டபோது, ‘வலிக்காக அழலீங்க...கொண்டுவந்த தண்ணீர் கொட்டிப் போச்சுங்க...அதான் அழறேன்’ என்று கூறியிருக்கிறார்.
இப்படியாக திம்மக்கா மரம் வளர்க்க ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. திம்மக்காவின் பேச்சுப்படி சொல்லப்போனால் அவரது மூத்த பிள்ளைக்கு இப்போது வயது 52 ஆகிறது. விளையாட்டுப்போல வளர்த்த மரங்கள் இன்று கூதூர் மக்களை குளு, குளு என வைத்தபடி திகு, திகுவென வளர்ந்து நாட்டிற்கு பயன்தரும் வகையில் வளர்ந்து நிற்கின்றது.
சுற்றுச்சுழலின் நண்பர் என்ற உயரிய விருதினை அமெரிக்கா அளித்து கவுரவித்தது வரை திம்மக்கா வாங்கியிருக்கும் விருதுகள் பலப்பல.
இன்றைய தேதிக்கு திம்மக்கா வளர்த்துள்ள மரங்களின் மதிப்பு பல கோடி ரூபாயாகும். அத்தனையும் இப்போது அரசாங்கத்தின் சொத்து.பதிலுக்கு அரசாங்கம் திம்மக்காவிற்கு மாதம் 500 ரூபாய் முதியோர் உதவித் தொகையும், வசிப்பதற்கு பெங்களுரூவில் ஒரு வீடும் வழங்கியது.
என் எசமான் (சிக்கண்ணா) இறந்த பிறகு, என் பிள்ளைகள்தான் (மரங்கள்) என் உலகம். இவைளை விட்டு நான் எங்கேயும் வரலை என்று சொல்லிவிட்டு பெங்களுரூ வீட்டை திருப்பிக் கொடுத்து விட்ட திம்மக்கா கூதூரிலேயே 500 ரூபாய் ஒய்வு ஊதியத்தில் தன் ‘பிள்ளைகளுடன் ’வாழ்ந்து வருகிறார். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட மரங்களுடன் செலவழிக்கும் நேரமே அதிகம்.
எண்பது வயதைத் தாண்டிவிட்ட திம்மக்கா தொடர்ந்து தொலைதூரம் சென்று தண்ணீர் சுமந்துவர முடியாத சூழ்நிலையில், புதிதாக மரமேதும் வளர்க்கவில்லை, ஏற்கனவே வைத்து, வளர்த்த மரங்களை மட்டும் பாதுகாத்து வருகிறார். வளர்ந்த மரங்களும் திம்மக்கா தங்கள் பக்கம்வரும்போது குளிர்ந்த காற்றை வீசியபடியும், ‘அம்மா எங்கள விட்டு எங்கேயும் போயிடாதீங்கம்மா’பேசியபடியும் காணப்படுகின்றன.

ஐயோ பாவம்! ,அப்பாவித் தமிழக மக்கள். | கூடங்குளம் விவகாரங்களைதூண்டி விட்டு, பற்பல இயக்கங்கள் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றன.

கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம், தமிழகத்தில் கொதித்துக் கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசும் இதை வைத்து, அரசியல் செய்து கொண்டிருக்கின்றன. 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய், மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டு, வரும் டிசம்பர் மாதத்தில் இயங்கி, தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையை போக்கவுள்ள, அணு உலைகளின் இறுதிக்கட்ட வேலைகள், அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டன.

உலகில், 529 அணு உலைகள் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் போது, "கூடங்குளத்தில் மட்டும் வெடிக்கும்; மக்கள் அழிவர்; மீன் வளம் பாதித்து, மீனவர்களின் வாழ்வாதாரம் பயங்கரமாக பாதிக்கப்படும்' என பயமுறுத்தி, ஆர்ப்பாட்டம் செய்து, உக்கிர போராட்டங்கள் நடத்துவதன் பின்னணி என்ன?முதல் காரணம்: இந்த அணு உலைகள், ரஷ்ய உதவியால் கட்டப்படுகிறது என்பதே. இதுவே, அமெரிக்க உதவியால் கட்டப்பட்டிருந்தால், எந்த போராட்டமும் நடந்திருக்க்காது என்பது, பட்டவர்த்தனமான உண்மை.இதில், உலக அரசியல், கம்யூனிச எதிர்ப்பு என்பதெல்லாம் இல்லை. இன்று ரஷ்யா, கம்யூனிஸ்டுகளால் ஆளப்படுவதில்லை. இது ஒரு பக்காவான வர்த்தக விவகாரம்.

இந்தியாவிற்கு ரஷ்யா பல உதவிகளைச் செய்துள்ளது. அமெரிக்காவும், நமக்கு சில உதவிகளைச் செய்து வருகிறது. இரு நாட்டு உதவிகளுக்கு இடையேயான பெரிய வேறுபாடு என்னவென்றால், அமெரிக்கா பொருள்களாகத் தான் கொடுக்கும். அவற்றை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளும் தொழில்நுட்பத்தையோ, அனுமதியையோ கொடுக்காது; தேவைப்படும் உதிரி பாகங்களையும், அமெரிக்காவிடமிருந்து தான் வாங்கிக் கொள்ள வேண்டும்.ஆனால், ரஷ்ய உதவிகள் அப்படிப்பட்டதல்ல; பொருள்களை வழங்குவதுடன், அவற்றை இந்தியாவிலேயே தயாரித்துக் கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்களையும், அனுமதியையும் அளிக்கிறது; நாமே உற்பத்தி செய்து கொள்ளவும் உதவுகிறது.
அதனாலேயே அர்ஜுன் டாங்குகள், ஐந்தாவது தலைமுறை போர் விமானங்கள் (எஸ்யூ-50) ஏவுகணைகள் ஆகியவற்றை, நாம் இந்தியாவிலேயே உற்பத்தி செய்து, நம் தேவைக்குப் போக வெளிநாடுகளில் விற்பனை செய்து வருகிறோம். அரசுக்கு அபரிமிதமான வெளிநாட்டுப் பணம், வந்து சேர்கிறது.

மின்சாரத் துறையிலும் அப்படியே. பல துறைகளில் நம் முன்னேற்றத்திற்கும், அத்தியாவசியமான மின்சார உற்பத்திக்கும் உதவ, ரஷ்யா முன்வந்துள்ளது. நாம் தன்னிறைவு அடைந்த பின், நாமாக எவர் உதவியுமில்லாமல், அணு உலைகளை உற்பத்தி செய்து கொள்ளும் வகையில், கூடங்குளத்தில் முன்னோடியாக அணுமின் நிலையங்களை அமைத்து வருகிறது ரஷ்யா.கூடங்குளத்தில் அமைந்துள்ள, இரண்டு வி.வி.இ.ஆர்., 1000 அணு உலைகளுக்குப் பின், ரஷ்ய தொழில்நுட்பத்துடன், அதே வகை அணு உலைகளை நாமே உற்பத்தி செய்து கொள்ளப் போகிறோம். அப்புறம், அமெரிக்காவிலிருந்து அணு உலைகளை ஏன் வாங்க வேண்டும்?

அதனால், 28 லட்சம் கோடி ரூபாய் பெருமானமுள்ள அணு உலைகளை அமெரிக்கா, இந்தியாவிற்கு உடனடியாக விற்க முடியாமல் போய்விடும். அமெரிக்காவுக்கு எவ்வளவு பெரிய இழப்பு!கூடங்குளம் அணு உலைகளைத் தடுத்து நிறுத்திவிட்டால், இந்தியா தன்னிறைவு அடையாது. ரஷ்யா மேலும் உதவுவது தடுக்கப்படும். இந்திய மார்க்கெட்டில், அமெரிக்கா நுழையலாம்; பணம் கொழிக்கலாம். இதுதான் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பின், பின்புலத்திலுள்ள முக்கிய காரணம்.அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் சம்பந்தமான விவாதங்கள், 2006 முதல் 2008 வரை, இந்திய முழுவதும் நடைபெற்று வந்தன. அப்போது, ரஷ்யா உதவியுடன், கூடங்குளம் அணு உலைகளின் கட்டுமான வேலைகள், பெரிய அளவில் நடைபெற்று வந்தன.அப்போதெல்லாம் அணு உலைகள் அமைக்கப்பட்டால், அவை வெடிக்கும்; லட்சக்கணக்கான மக்கள் மாண்டு விடுவர் என, போராட்டங்கள் வெடிக்கவில்லை ஏன்?

அணு உலைகளே வேண்டாம் என்பவர்கள், இப்போது போல் அப்போது கொதித்தெழுந்திருக்க வேண்டியது தானே! ஏன் வாய் மூடி மவுனம் காத்தனர்? காரணம் வெள்ளிடைமலை.அமெரிக்காவுடன் ஏற்பட்ட, 123 அணு உலை ஒப்பந்தம் அமலுக்கு வர, பல சிக்கல்கள் ஏற்பட்டுவிட்டன. இழப்பீடு சம்பந்தமான இந்திய சட்டத்தை, இங்கு உலைகள் கட்டவிருந்த, அமெரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி போன்ற தனியார் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், இந்திய மண்ணில் அமெரிக்கா கால் வைக்க முடியவில்லை.கூடங்குளம் அணு உலைகள், வெற்றிகரமாகச் செயல்படத் துவங்கினால், ரஷ்யாவே இந்தியாவில் கட்டப்படவுள்ள மற்ற உலைகளைக் கட்டத் துவங்கும். பெரிய இந்திய மார்க்கெட்டை, அமெரிக்கா இழக்கும்; அமெரிக்க ஆசை, நிராசையாகப் போய்விடும்.

அந்நிலையைத் தடுக்கவே, இத்தனை ஆண்டுகளுக்குப் பின், கூடங்குளம் அணு உலை உற்பத்தியைத் துவங்கும் சமயத்தில், இந்த திடீர் போராட்டம்; அதுவும் இத்தனை உக்கிரமாக.லோக்கல் காரணம்மற்றுமொரு முக்கியமான தூண்டுதல், மூன்று மாவட்டங்களின் முக்கிய பிரமுகர்களிடமிருந்து. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில், பூமிக்கடியில் அதிகளவு கனிமங்கள் உள்ளன.இவற்றை, சில தனியார் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக எடுத்து பணத்தை அபரிமிதமாக அள்ளிக் கொண்டிருக்கின்றன. கனிம சாம்ராஜ்யம் நடத்துவோர், எதையும் சாதிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.தற்சமயம் கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கத் துவங்கினால், மத்திய அரசு சட்டப்படி, 16 கி.மீ., சுற்றளவுக்கு கனிமங்களை வெட்டி எடுக்கவோ, தொழிற்சாலைகள் அமைக்கவோ, மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் அமைக்கவோ அனுமதியில்லை என்பது, பெரும் தொழிலதிபர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதனால், பல கொழுத்த தொழிலதிபர்களும், கூடங்குளம் போராட்டத்தை ஆதரித்து வருவதோடு, பல உதவிகளையும் செய்து வருகின்றனர்.நிபுணர் குழு ஒன்றை அமைத்து, உலையை ஆய்வு செய்து, மக்களின் அச்சத்தைப் போக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. போராட்டக்காரர்களின் அச்சத்தைப் போக்க முடியுமா?திறந்த மனதுடன் அவர்கள், எதையும் கேட்கத் தயாராயில்லை. அளவுக்கு மீறிய பொய்ப் பிரசாரங்களாலும், துர்போதனைகளாலும், அச்சமும், மனக் கிளர்ச்சியும், அம்மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன.கிளர்ச்சியை முன்னிருந்து நடத்துபவர்கள், சில சமூகக் கட்டுப்பாட்டை தீவிரமாகவும், முழுமையாகவும் பயன்படுத்தி வருகின்றனர். உலகில் இயங்கி வரும், 529 உலைகளிலும், மிகவும் அதிநவீனமான பல பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது, கூடங்குளம் அணு உலைகள் என, எத்தனை விஞ்ஞான ஆதாரங்களுடன் நிரூபித்தாலும், அவர்கள் காது கொடுத்து கேட்கத் தயாரில்லை.தமிழகத்திலேயே, கல்பாக்கத்தில், 25 ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வரும், தலைசிறந்த உதாரணத்தை நினைத்துப் பார்க்கவே அவர்கள் விரும்பவில்லை.கல்பாக்கம் உலையைச் சுற்றி, 40 ஆயிரம் மக்கள், எந்த பாதிப்புமின்றி கடந்த கால் நூற்றாண்டு காலமாக வசித்து வருவதையோ, உலையைச் சுற்றி எப்போதும் போல், மீனவர்கள் மீன் பிடித்து வாழ்ந்து வருவதையோ, ஒரு சாதாரண நிர்தட்சயமான உண்மை என்று, கண்டுகொள்ள மறுக்கின்றனர்.

பற்பல லெட்டர்பேடு இயக்கங்கள், இந்த சாக்கில் மக்களைத் தூண்டி விட்டு, தங்களை முன்னிறுத்தி குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றன.இங்குள்ள அரசியல் கட்சிகள் எல்லாவற்றுக்கும், இவையெல்லாம் நன்றாகத் தெரியும். ஆனால், ஓட்டு ஆதாயங்களுக்காக, கூடங்குளம் விவகாரங்களை அரசியலாக்கிக் கொண்டிருக்கின்றன. பாமரத்தனமான பயத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.உண்மைகள் மறைக்கப்பட்டு, பொய்ப் பிரசாரங்கள் பேயாட்டம் ஆடுகின்றன. இதனால், மின் பற்றாக்குறையால் அல்லலுறும் அப்பாவித் தமிழக மக்கள் தான், ஐயோ பாவம்!

Thursday, 13 October 2011

ஏன் சொல்ல மாட்டார்? இவர் பின்பற்றுவது மகாத்மா காந்தியை அல்லவே...!



தொழிலதிபர்களைச் சிறையில் அடைப்பதால் இந்தியாவுக்கு முதலீடு வாய்ப்புகள் தடைபடுகிறது' என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ள கருத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

யூனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, 2ஜி வழக்கில் சிறையில் உள்ள ஸ்வான் டெலிகாம் இயக்குநர் வினோத் கோயங்கா ஆகியோரது ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்குரைஞரிடம் நீதிபதிகள் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்ததுடன், "தொழிலதிபர்களைச் சிறையில் தள்ளுவதில் நாங்கள் அதிக ஆர்வம் காட்டுவதைப் போன்ற தோற்றத்தை அமைச்சரின் கருத்து உருவாக்கியுள்ளது. அவர் பேசியது உண்மைதானா? உண்மையென்றால், அது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது' என்று கூறியுள்ளனர்.

சில விவகாரங்கள் தீவிரமாகப் பேசப்படும்போது, எதையாகிலும் ஒன்றைச் சொல்லி, மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதில் அரசியல் கட்சித் தலைவர்கள் கைதேர்ந்த நிபுணர்கள். காங்கிரஸில் இதுநாள்வரை திக்விஜய் சிங், மணிஷ் திவாரி, கபில் சிபல் போன்றவர்கள்தான் இப்படிப்பட்ட அதிர்வுக் கருத்துகளுக்குப் புகழ் பெற்றவர்கள். இப்போது அமைச்சர் குர்ஷித்தும் இந்த வரிசையில் சேர்ந்து கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரரும் சன் டிவி நிர்வாக இயக்குநருமான கலாநிதி மாறன் ஆகியோர் மீது 2ஜி ஒதுக்கீடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கும் நாளில் அமைச்சர் குர்ஷித் இப்படி ஒரு கருத்துத் தெரிவித்திருப்பது எதற்காக என்பது ஒருபக்கம் இருக்கட்டும். உண்மையில் தொழிலதிபர்களைச் சிறையில் அடைத்தால் முதலீடுகள் வராமல் ஸ்தம்பித்துவிட்டதா என்று பார்த்தால் அப்படியேதும் நடந்துவிட்டதாகத் தெரியவில்லை.

இந்தியாவில் குறிப்பிடத்தகுந்த தொழிலதிபர்கள் எத்தனை பேர் தற்போது சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று விரல்விட்டு எண்ணிவிடலாம். அதுவும்கூட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி கட்டுமானம் மற்றும் கொள்முதலில் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டிருப்பவர்கள்தான். அனைவரும் அறிந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்க ராஜு, கர்நாடகத்தில் கனிமச் சுரங்க அதிபர் ஜனார்த்தன ரெட்டி இவர்களைத் தவிர வேறு பெருந்தொழிலதிபர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அப்படியே இவர்களைக் கைது செய்திருப்பதால், அவர்கள் சார்ந்துள்ள நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கிறதா என்றால் அப்படியும் ஏதும் நடக்கவுமில்லை.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தங்களது நிலத்தையோ, வீட்டையோ அடமானமாக வைத்துக் கடன் வாங்கிய தனிநபர்கள், அந்தக் கடனைத் திருப்பித்தர முடியாமல் போகும்போது, அடமானமாகத் தரப்படும் வஸ்து ஏலத்தில் விடப்படுகிறது. அதுவரை சரி. ஐந்து லட்சமும், பத்து லட்சமும் பெறுமானமுள்ள கடனைத் திருப்பித்தர முடியாமல் தங்களது சொத்துகள் ஏலம் விடப்படுவதைப் பார்த்து மனம் நொந்து போவது போதாது என்று, அவர்களது படங்களுடன் சம்பந்தப்பட்டவர்களின் மானத்தையும் நமது வங்கிகள் ஏலம் விடுகின்றனவே, இது சரிதானா என்கிற கேள்வியை எழுப்பாதவர்களே கிடையாது.

தனிநபர் ஒரு சில லட்சங்கள் கடன் வாங்கிக் கடனைத் திருப்பித்தர முடியாவிட்டால், அவர்களது அடமானத்தை ஏலத்தில் விடுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் படத்தையும் விளம்பரப்படுத்தி அவமானப்படுத்தும் அதே வங்கிகள், எந்தவித ஈடோ உத்திரவாதமோ இல்லாமல் பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை ஸ்வாகா செய்துவிட்டு, யோக்கியர்களாக வலம்வரும் பல தொழிலதிபர்களை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லையே, ஏன்?

இந்தக் கேள்விக்கு ஒரு விசித்திரமான பதிலைத் தந்து தொழிலதிபர்கள் மீதான தனது அக்கறையை வெளிப்படுத்திக் கொண்டார் இன்றைய உள்துறை அமைச்சரும் அன்றைய நிதியமைச்சருமான ப. சிதம்பரம். அதற்கு அவர் தந்த விளக்கம் - ""பெரும் தொழிலதிபர்களை அவமானப்படுத்தினால், அவர்களது நிறுவனத்தின் பங்குகள் சரிந்துவிடவும், அதனால் அந்த நிறுவனமே பாதிக்கப்படவும் வழிகோலியதாகும். அதனால் பல ஆயிரம் தொழிலாளர்களின் நலன் பாதிக்கப்படக்கூடும்!''

இந்தியாவின் முன்னணித் தொழில் நிறுவனங்கள் பலவும் பல்வேறு வங்கிகளில் பெரும் தொகையைக் கடனாகப் பெற்று, அதற்கு வட்டியும் கொடுக்காமல், அசலையும் செலுத்தாமல் தாங்கள் நஷ்டமடைவதாகக் காரணம் காட்டி, ஆட்சியாளர்களின் ஆசியோடு, வாங்கிய கடனில் பாதிப் பணத்தை மட்டும் வட்டியில்லாமல் கட்டியிருப்பவைதான் என்பது ஒரு விசாரணை வைத்தால் வெட்டவெளிச்சமாகிவிடும். இப்படி மக்கள் வரிப்பணத்தைத் தங்களது ஆடம்பர வாழ்க்கைக்கும், வியாபார சூதாட்டத்துக்கும் பயன்படுத்தி வளையவருபவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று வாதிடும் அமைச்சர்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறிக்கொள்ளும் வேடிக்கை இந்தியாவுக்கு மட்டுமே இருக்கும் தனித்துவங்களில் ஒன்று.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வாராக்கடன் கடந்த நிதியாண்டின் முடிவில் ரூ. 71,047 கோடி. இது கடந்த ஆண்டைவிட ரூ. 14 ஆயிரம் கோடி அதிகம். இதில் ஏறத்தாழ ரூ. 50 ஆயிரம் கோடி கார்ப்பரேட் நிறுவனங்கள் தரவேண்டிய வாராக்கடன். இந்தக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் வக்காலத்து வாங்குகிறார்கள் அமைச்சர்களான ப. சிதம்பரமும், சல்மான் குர்ஷித்தும்.

அது தனிநபராக இருந்தாலும் சரி, கார்ப்பரேட் நிறுவனங்களாக இருந்தாலும் சரி சட்டமும் நியாயமும் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும்? நியாயமும் தர்மமும் இலலாத வியாபாரம் என்பது மோசடி என்று கருத்துத் தெரிவித்த காந்தி பிறந்த மண்ணில் கதர்ச் சட்டை அணிந்து, காங்கிரஸ்காரராக வளையவரும் அமைச்சர் சல்மான் குர்ஷிதா சொல்வது, தொழில் அதிபர்களைக் கைது செய்யக்கூடாது என்று?

ஏன் சொல்ல மாட்டார்? இவர் பின்பற்றுவது மகாத்மா காந்தியை அல்லவே...!

Saturday, 1 October 2011

“சத்யசோதனை” மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869 – 1948)


அஹிம்சை போராட்டம் மூலம் எதையும் சாதிக்கலாம் என்று உலகிற்கு நிரூபித்தவர் மஹாத்மா அவர்கள். வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று உலகிற்கு உணர்த்தியவரின் சில புகைப்படங்கள். இவருடைய “சத்யசோதனை” புத்தகம் அனைவருக்கும் ஒரு சிறந்த வழிக்காட்டி.
குழந்தையாக மோகன்தாஸ்
1 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)சிறுவனாக
2 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)இளைஞராக
3 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)வக்கீலாக
4 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)
5 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)
6 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)தென் ஆப்ரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு மனைவி கஸ்துரிபாயுடன்
7 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)தென் ஆப்ரிக்கா நண்பர்களுடன்
8 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)தென் ஆப்ரிக்கா நண்பர்களுடன்
9 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)கஸ்தூரிபாய் அவர்களுடன்
10 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)
பொதுமக்களுடன் உரையாடல்
11 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)ரயிலில் அமர்ந்து குதூகலமாக பேசுகிறார்
12 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)இங்கிலாந்து ல் டவ்னிங் தெரு என்ற இடத்தில்
13 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)இங்கிலாந்து ல் டவ்னிங் தெரு என்ற இடத்தில்
14 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)பேச்சை கேட்டு கொண்டு இருக்கும் அவருடைய அபிமானிகள்
15 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)
உப்பு சத்யாகிரகத்தில்
16 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)தண்டி யாத்திரையில்
17 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)உப்பு எடுக்கும் மஹாத்மா
18 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)அமைதியான முகத்தோடு ஒரு அட்டகாச புன்முறுவல்
19 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)ஆதரவாளர்களுடன் ரயிலில்
20 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)
மானு மற்றும் அபாவுடன்
21 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)கான் அப்துல் கபார் கான் உடன் ஒரு நடை
22 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)மானுவும் அபாவும் மஹாத்மாவுக்கு தோள் கொடுத்து உதவுகிறார்கள்
23 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)மாதாத்மா நேருவுடன் ஒரு சந்தோஷ தருணத்தில்
24 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)முக்கிய கலந்துரையாடலின் போது
25 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)
உப்பு சத்யாகிரக பொது கூட்டத்தில்
26 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)ஜின்னாவுடன்
27 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)மஹாத்மாவின் பிரபலமான புன்சிரிப்பு
28 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)தன்னை பின் பற்றுபவர்களுடன் உப்பு சத்தியாகிரகத்தில்
29 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)ஒரு சிறுவன் மஹாதமாவின் கை தடியை பிடித்து அவரை முன் நடத்தி செல்கிறான்
30 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)
செய்தித்தாள் படித்துக்கொண்டு இருக்கும் போது
31 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)தளர்ந்து போன காலத்தில் கஸ்தூரிபாய் அவர்களுடன்
32 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)உண்ணாவிரத்தில்
33 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)கருணை பொங்கும் முகத்துடன்
35 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)இறுதிப்பயணம் icon sad மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)
34 மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869   1948)
காலங்கள் பல கடந்தாலும் இன்னும் உலக மக்கள் அனைவராலும் விரும்பப்படும் மாமனிதர். எந்த வன்முறையிலும் இறங்காமல் ஆங்கிலேயர்களை அமைதியால் அடித்து நொறுக்கியவர். வீரன் என்பவன் கத்தியால் சாதிப்பவன் அல்ல அமைதியால் சாதிப்பவன் என்று உலகிற்கு உணர்த்தியவர்.

அண்ணல் வழி நடப்போம்

நமது நாட்டிற்கு பலாத்காரமற்ற முறையில் சுதந்திரம் சம்பாதித்துக் கொள்ளும் வழியைக் காட்டி, அந்த வழியில் பாடுபட்டு, சுதந்திரம் வாங்கிக்கொடுத்துவிட்டே மாண்டார் அண்ணல் காந்தி. மக்களுக்காவே அதிலும் குறிப்பாக ஏழை எளியவர்களுக்காகவே உத்தம வாழ்க்கை வாழ்ந்து மடிந்தார் மகான் காந்தி.

காந்திஜியின் உயரிய எண்ணங்கள் நனவாக்கப்பட வேண்டும். அவரது நல்ல இலட்சியங்கள் மக்களது மனதெங்கும் ஊறிப் பதியவேண்டும். எல்லோரும் நல்வாழ்வு பெறப்பாடுபட வேண்டும்.

மகான் காந்திஜியின் உயரிய எண்ணம் என்ன? எதற்காக வாழ்ந்தார்? பாடுபட்டார்? கண்டபலன்தான் என்ன? யோசித்துப் பார்க்க வேண்டும்.

வாழ்க்கைத்தரத்தில் மட்டுமல்லாமல் சமூக சமுதாய அந்தஸ்த்திலும் மக்கள் அனைவரும் சரி நிகர் சமானம் என்ற உணர்ச்சி நாடெங்கும் நிலவ வேண்டும். உயர்வு – தாழ்வு உணர்ச்சிக்கு வழியின்றி மக்கள் வாழ வேண்டும். அந்த மகத்தான சமுதாயம் உருவாக வேண்டும் என்ற இலட்சியத்தைப் பரப்ப வேண்டும்.

இந்த இலட்சியத்தை மக்களிடையே பரப்பி- சமதர்ம சமுதாயத்தை ஏற்படுத்தத்தான் மகான் காந்தி சுதந்திரம் வேண்டினார். பாடுபட்டுப் பெற்றுத் தந்தார். வேறு எதற்காக அவர் சுதந்திரம் வேண்டுமென்றார்? வேறெங்கும் இல்லை. மக்கள் அனைவரும் சுகமாக நல்வாழ்வு வாழத்தானே!
தன் நலன் கருதாது பிறர் நலனில் மட்டுமே அக்கறை காட்டிய இவர் மஹாத்மா என்று சொல்லுக்கு மிகப்பொருத்தமானவர்.